

உறவு, நட்பு என நெருக்கமான ஒருவரின் பிறந்தநாளுக்கு என்ன பரிசு வாங்கலாம் என்று யோசிக்கிறீர்களா? தங்கம், விடுமுறை வவுச்சர், கிப்ட் வவுச்சர் என்று சுழன்று கொண்டிருந்த பரிசுக் கலாச்சாரம் இனி ஒரு புதிய திசையில் பயணிக்கப் போகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டையே நேரடியாக பரிசாக வழங்கும் வாய்ப்பை இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (செபி) உருவாக்கி வருகிறது. இந்த புதிய திட்டம் குறிப்பாக முதல்முறை முதலீட்டாளர்களை நிதிச் சந்தையில் இணைக்கும் நோக்கத்துடன் முன்மொழியப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு செபி வேண்டுகோள் விடுத்துள்ளது.
திட்டம் எப்படி செயல்படும்?
இந்தத் திட்டத்தில், நீங்கள் வங்கி பரிமாற்றம் அல்லது UPI மூலம் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் கிஃப்ட் கார்டை (Gift Prepaid Payment Instrument) வாங்கி, உங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு பரிசாக வழங்கலாம்.
அதைப் பெற்றவர், சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் (ஏஎம்சி) இணையதளத்தில் சமர்ப்பித்து, தனக்கு விருப்பமான திட்டத்தில் முதலீடு செய்துகொள்ளலாம்.
பரிசை வழங்குபவர் ஒரு திட்டத்தை பரிந்துரைத்தாலும் பெறுபவர் தனது விருப்பப்படி வேறு திட்டத்தையும் தேர்வு செய்யலாம். இதற்காக ஒரு விநியோகஸ்தரின் உதவியையும் நாடலாம். இது பெறுபவருக்கு முழு சுதந்திரத்தை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.