

‘என்ன தொழில் செய்யலாம்?' என்ற யோசனை பலருக்கும் இருக்கிறது. எதிர்கால வாய்ப்புள்ள தொழிலாக இருக்க வேண்டும்... ஏ.ஐ. பாதிக்காத தொழிலாக இருக்க வேண்டும்... தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருந்தாலும், அதைப் பயன்படுத்தி வளர்கிற தொழிலாக இருக்க வேண்டும்..
இப்படிப்பட்ட தேடல் உள்ளவர்களுக்காக, முதியோர் நலன் சார்ந்த 10 தொழில்களின் பட்டியலை இங்கே தந்துள்ளோம்.
ஏன் முதியோர் தொழில்கள்? இந்தியாவில் ஏறத்தாழ 18 கோடி பேர், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 1.3 கோடி. 2050-ல் இது இரு மடங்காகி, இந்திய அளவில் 35 கோடி, தமிழகத்தில் 2.5 கோடி முதியவர்கள் இருப்பார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே இவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் உயர்ந்து கொண்டேதான் இருக்கும். சரி... இவர்களுக்காக என்ன தொழில்கள் தொடங்கலாம்...? இதோ, அந்தப் பட்டியல்...
1.முதியோர் உணவகம்
பொதுவாக இளைஞர்கள் உணவகங்களில் சாப்பிடுவதற்கும், முதியவர்கள் உணவகங்களில் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. காரம், உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என அனைத்தும் குறைவாக இருக்க வேண்டும். முடிந்தவரை இயற்கை உணவுகள், ஆர்கானிக் உணவுகள், தானியங்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை அதிகம் இடம் பெற்றிருக்க வேண்டும். இதுபோன்ற உணவகங்களுக்கு எதிர்காலத்தில் தேவைகள் ஏற்படும்.
ஒவ்வொரு வேளையும், இல்லம் தேடி உணவை வழங்கலாம். மேலும் 200 அல்லது 300 வீடுகள் இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளில் ‘கம்யூனிட்டி கிச்சன்'களுக்கான வரவேற்பும் அதிகரிக்கும்.
2.முதியோர் உதவியகம்
பிள்ளைகள் வெளிநாட்டில் வசிக்கும்போது, இங்கே தனியாக இருக்கும் ஒவ்வொரு முதியவருக்கும் அல்லது முதிய தம்பதியினருக்கும் ஸ்மார்ட் போனை இயக்குவது, இ-மெயில் அனுப்புவது, ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது, கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்குவது, மருந்துகள் வாங்குவது, மருத்துவரிடம் அழைத்துச் செல்வது போன்ற வெளி வேலைகளுக்கும், தொழில்நுட்ப வேலைகளுக்கும் உதவியாளர்கள் தேவைப்படுவார்கள்.
ஆனால் அவர்கள் முழு நேரமும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணி நேரம் வந்து விட்டு சென்றாலே போதும். அத்தகையவர்களுக்கான சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகள் இருக்கும்.