

உலகளாவிய தொழில்நுட்பப் போட்டியில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) கவனம் பெறும் நிலையில், இந்தியாவின் பொருளாதாரப் போக்கை அமைதியாக மாற்றி வருகிறது மின்சார வாகன (EV) புரட்சி. தொழில் துறையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களும் புள்ளிவிவரங்களும் இதற்குச் சான்றாக உள்ளன.
2016-ல் சுமார் 50,000-ஆக இருந்த மின் வாகன விற்பனை, 2025ல் சுமார் 23 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மின் வாகன விற்பனை சுமார் 46 மடங்கு வளர்ச்சி பெற்று, இத்துறையின் வேகமான விரிவாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
இது, மின் வாகனங்கள் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக மாறிவருவதைக் காட்டுகிறது. இந்த வளர்ச்சியை சந்தை மதிப்பீடுகளும் உறுதிப்படுத்துகின்றன. 2025-ல் சுமார் ரூ.31 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்படும் இந்திய மின் வாகனச் சந்தை, 2034-க்குள் சுமார் ரூ.16 லட்சம் கோடியாக உயரும் என சர்வதேச சந்தை ஆய்வு நிறுவனமான IMARC Group கணித்துள்ளது.
அதேநேரம், இந்திய மின் வாகன சந்தை 2030-க்குள் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்; 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
2025-ல் மின் வாகனப் பதிவுகளில் உத்தரப் பிரதேசம் முதலிடத்திலும், மகாராஷ்டிரம் மற்றும் கர்நாடகம் அடுத்தடுத்த இடங்களிலும் இருந்தன. இது வெறும் விற்பனை வளர்ச்சி அல்ல; நாடு தழுவிய உற்பத்தி, சேவை, முதலீடு, வேலைவாய்ப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட புதிய தொழில் சூழல் உருவாகி வருவதைக் காட்டுகிறது.
இந்தியா புதைபடிவ எரிபொருள்களின் மீதான சார்பை படிப்படியாகக் குறைத்து வரும் நிலையில், இந்தத் தரவுகள் புதிய தொழில்முனைவோருக்கும் மின் பொறியியல் பட்டதாரிகளுக்கும் புதிய தொழில்முனைவு வாய்ப்புகளைத் திறக்கின்றன.
அரசுக் கொள்கைகள்
இந்த வளர்ச்சிக்கு அரசின் கொள்கைகளே காரணம். மத்திய அரசு தற்போது நிறுவனங்களின் சராசரி எரிபொருள் திறன் (Corporate Average Fuel Efficiency - CAFE) தொடர்பான அடுத்தகட்ட விதிமுறைகளான CAFE III (2027–2032) மற்றும் CAFE IV (2033–2037) திட்டங்களை உருவாக்கி வருகிறது. இவற்றில் கிலோமீட்டருக்கு முறையே 91.7 கிராம் மற்றும் 70 கிராம் கார்பன் உமிழ்வு வரம்புகள் முன்மொழியப்பட்டுள்ளன.