

மருத்துவத் துறையில் மிகவும் சிக்கலான, கோடிக்கணக்கில் செலவு பிடிக்கும் தொழில்நுட்பங்களில் முதன்மையானது 'எம்ஆர்ஐ ஸ்கேனர்' (MRI Scanner) தயாரிப்பு.
அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற வல்லரசு நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் (எம்என்சி) மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த சந்தையில், ஆண்டுக்கு சுமார் ரூ.3,500 கோடி மதிப்பிலான எம்ஆர்ஐ கருவிகளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.
இந்தச் சூழலில்தான், பெங்களூருவைச் சேர்ந்த ‘வாக்சல்கிரிட்ஸ்’ (Voxelgrids) என்ற இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனம், இந்தியாவின் முதல் உள்நாட்டு எம்ஆர்ஐ ஸ்கேனரை உருவாக்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஆனால், இந்த வெற்றிக்காக அந்த நிறுவனம் சந்தித்த சவால்களும், பன்னாட்டு நிறுவனங்களின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பித்த கதையும் ஒரு படத்தின் திரைக்கதையைவிட மிகவும் சுவாரஸ்யமானது.
யார் இந்த அர்ஜுன் அருணாச்சலம்?
வாக்சல்கிரிட்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயல் அதிகாரியுமான (சிஇஓ) அர்ஜுன் அருணாச்சலம், அமெரிக்காவின் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக்கழகத்தில் மின்சாரப் பொறியியல் பயின்று, ஜிஇ ஹெல்த்கேர் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்தவர்.
இவரது தந்தை இந்திய விமானப்படையில் அதிகாரியாகப் பணியாற்றியவர் என்பதால், இயல்பாகவே இவருக்குள் தேசபக்தியும் தாய்நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் ஆழமாக வேரூன்றி இருந்தது.
ஜிஇ நிறுவனப் பணிக்குப் பிறகு, மும்பை ஐஐடி பேராசிரியராக இணைந்த அர்ஜுனுக்கு அப்போதுதான் ஒரு கசப்பான உண்மை உரைத்தது. இந்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் சொந்தமாக எம்ஆர்ஐ ஆய்வுகளைச் செய்யக் கூட வெளிநாட்டு நிறுவனங்களின் தயவை எதிர்நோக்க வேண்டியுள்ளதே என்ற ஆதங்கம்தான் அது.
"இந்தியாவில் ஒரு ஸ்கேன் செய்யச் சராசரியாக ரூ.10,000 செலவாகிறது. சி.டி. ஸ்கேனர்களைவிட எம்ஆர்ஐ பயன்பாடு இந்தியாவில் மிகக் குறைவாக இருக்கிறது. இதற்கு அதன் கட்டணமும் ஒரு முக்கிய காரணம். நாம் எதையுமே இங்குத் தயாரிப்பதில்லை என்ற நிலையை மாற்ற வேண்டும் என்பது என் இலக்காக மாறியது" என்கிறார் அர்ஜுன்.