

மின்சார வாகன உலகை ஆட்டிப்படைக்கும் சீனாவின் ஏகபோக உரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்தியாவின் சிலிக்கான் வேலியான பெங்களூருவிலிருந்து ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சி வெடித்துள்ளது. 'விமேக் லேப்ஸ்' என்ற இந்திய ஆழ்தொழில்நுட்ப நிறுவனம் கண்டறிந்துள்ள 'விர்ச்சுவல் மேக்னட்' (Virtual Magnet) தொழில்நுட்பம், உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் தற்போது தயாரிக்கப்படும் அதிநவீன மின்சார வாகன மோட்டார்களில் ‘பெர்மனென்ட் மேக்னட்கள்’ (காந்தம்) பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தயாரிக்க நியோடைமியம், டிஸ்ப்ரோசியம் போன்ற அரிய வகை தனிமங்கள் அத்தியாவசியமானவை. இந்த அரிய வகை தனிமங்களைச் சுத்திகரித்து, காந்தங்களாக மாற்றும் 90 முதல் 95 சதவீத சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள நாடு சீனா.
இந்தத் தனிமங்களைச் சுத்திகரிக்கும்போது உருவாகும் கழிவுகள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பதால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இந்தத் தயாரிப்பில் நேரடியாக களமிறங்கத் தயங்கின. இதை சாதகமாக்கிக் கொண்ட சீனா, இத்துறையில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்து இப்போது உலகையே தன் பக்கம் திருப்பி வைத்திருக்கிறது.