

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், தரம் மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தின் உலகளாவிய அடையாளமாக `மேட் இன் ஜப்பான்' (Made in Japan) திகழ்ந்தது. ஆனால், 21-ம் நூற்றாண்டில் ஜப்பான் பொருளாதாரம் சரிந்து வருவதை நாம் உணர முடிகிறது.
அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாக உலகிலேயே வேகமாக வளரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதன்படி, கடந்த 2024-25 நிதியாண்டில் இந்தியா உலகின் 5-வது பொருளாதார நாடாக இருந்தது. நடப்பு 2025-26 நிதியாண்டில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4-வது இடம் பிடித்துள்ளது. 2030-க்குள் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி 3-ம் இடம் பிடிக்கும் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் ஜப்பான் பொதுத்தேர்தலில் பிரதமர் சனே டகைச்சி தலைமையிலான கூட்டணி 352 இடங்களைக் கைப்பற்றி `அறுதிப் பெரும்பான்மை' பெற்றுள்ளது. இந்த வலுவான அரசியல் தலைமை, ஜப்பான் தனது பொருளாதார வியூகங்களை இந்தியாவுடன் இணைந்து மறுசீரமைக்க ஒரு புதியப் பாதையை வகுத்துள்ளது.
முதியவர்கள் அதிகரிப்பு, குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் தேக்கமடைந்த உள்நாட்டுத் தேவை ஆகியவை ஜப்பானின் பொருளாதாரச் சரிவுக்கு முக்கியக் காரணிகளாக அமைந்தன. இருப்பினும், வாகன உற்பத்தி, ரோபோட்டிக்ஸ் மற்றும் துல்லியப் பொறியியல் துறைகளில் ஜப்பான் இன்றும் உலகத் தலைவனாகத் தன் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இந்தியாவுக்கான வாய்ப்புகள்: பிரதமர் சனே டகைச்சியின் வெற்றி, ஜப்பானின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, சீனா மீதான வர்த்தக சார்பைக் குறைக்க, `சீனா பிளஸ் ஒன்' வியூகத்தின் மூலம் இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளுடன் தனது விநியோகச் சங்கிலியை இணைக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது.