

தலிப் சிங் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், புதிய 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் (Labour Codes) வழிகாட்டுதலின்படி, குறைந்தது 32 கோடி அமைப்புசாரா, கிக் (Gig) மற்றும் பிளாட் பார்ம் தொழிலாளர்களுக்குக் காப்பீடு வழங்கி, அவர்களின் சமூக பாதுகாப்பை விரிவுபடுத்த ஆலோசித்து வருகிறது.
தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் (ESIC), இதற்கான பொருத்தமான திட்டத்தை உருவாக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச மாதிரிகளை ஆய்வு செய்து வருவதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பங்களிப்பு + அரசு மானியம் மாதிரி
பொது நிதி ஆதாரங்கள் குறைவாக இருப்பதை ஈடுகட்ட, தொழிலாளர்களின் தன்னார்வ பங்களிப்பு மற்றும் அரசு மானியம் இணைந்த ஒரு மாதிரியை அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. தற்போது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இது கட்டாயமில்லை.
இத்திட்டம் அமலுக்கு வரும் போது, அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் இணைவதால் காப்பீட்டு பிரீமியம் குறையும், இதனால் அவர்கள் எளிதாக இதில் சேர முடியும்.
இதுகுறித்து அமைச்சக அதிகாரிகள் கூறும்போது, "சமூக பாதுகாப்பு என்பது வரி மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டோ அல்லது பகுதியளவு வரி நிதியைக் கொண்டோ அமையலாம். ஆனால், அரசிடம் முழுமையாக நிதி இல்லாத நிலையில், வருவாயை எவ்வாறு பெருக்குவது என்பதே முக்கியமான சவால்" என்றனர்.