

உலகளாவிய தொழில்நுட்ப வரைபடத்தில் இந்தியாவின் தற்போதைய நகர்வுகள் உற்று நோக்கத்தக்கவை. முன்பு நாடுகளுக்கு இடையிலான வெளியுறவு என்பது வர்த்தகம் மற்றும் பாதுகாப்பை மட்டுமே சார்ந்திருந்தது. ஆனால் இன்று, ‘டெக்-டிப்ளமசி’ (Tech-Diplomacy) எனப்படும் தொழில்நுட்ப ராஜதந்திரம் உலக அளவில் முதன்மை பெற்றுள்ளது.
இதன் அடிப்படையில், பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. `செயற்கை நுண்ணறிவு' (ஏ.ஐ), செமிகண்டக்டர் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களில் இந்தியாவை முன்னணி நாடாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இத்திட்டங்களின் ஆழத்தைப் புரிந்து கொள்ள, சில அடிப்படைத் தொழில்நுட்பச் சொற்களை அறிவது அவசியம். முதலாவதாக, ‘எக்ஸாஃப்ளாப்’ (Exaflop) என்பது ஒரு வினாடிக்கு ஒரு குவிண்டில்லியன் கணக்கீடுகளைச் செய்யும் திறன். அதாவது, பத்தின் அடுக்கு பதினெட்டு (1018) என்ற பிரம்மாண்ட எண்ணிக்கையிலான கணக்கீடுகளை நொடிப்பொழுதில் செய்யும் ஆற்றல்.
அடுத்ததாக, ‘குவாண்டம் கம்ப்யூட்டிங்’ (Quantum Computing). சாதாரணக் கணினிகள் பூஜ்ஜியம் அல்லது ஒன்று என இயங்கும். ஆனால் குவாண்டம் கணினி ‘கியூபிட்’ (Qubit)
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் பூஜ்ஜியமாகவும் ஒன்றாகவும் செயல்படும். ஆயிரம் ஆண்டுகள் தேவைப்படும் கணக்கீட்டை இது சில நிமிடங்களில் முடித்துவிடும்.
அதேபோல, 6-ஜி தொழில்நுட்பம் என்பது தற்போதைய 5-ஜி வலையமைப்பை விட நூறு மடங்கு அதிகவேகம் கொண்டது. இது 2030-க்குள் உலகெங்கும் பரவலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப நகர்வுகளின் முதல் படியாக, ஐக்கிய அரபு அமீரக பயணத்தின்போது, ‘காண்டோர் கேலக்ஸி இந்தியா’ (Condor Galaxy India) திட்டத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அமெரிக்க சிப் நிறுவனம் ஒன்று இந்தியாவுக்கு இவ்வளவு அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குவது இதுவே முதல்முறையாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் 8 எக்ஸாஃப்ளாப் திறன் கொண்ட பிரம்மாண்டமான சூப்பர் கம்ப்யூட்டர் கட்டமைக்கப்படுகிறது.
இதனை இந்தியாவின் ‘சி-டாக்’ (C-DAC), அமீரகத்தின் ‘ஜி-42’ (G-42), அமெரிக்காவின் ‘செரிப்ராஸ்’ (Cerebras) மற்றும் ‘எம்.பி.இசட்.யு.ஏ.ஐ’ (MBZUAI) ஆகிய அமைப்புகள் இணைந்து உருவாக்குகின்றன.
இந்த சூப்பர் கம்ப்யூட்டர் 64 ‘செரிப்ராஸ் சி.எஸ்-3’ சிஸ்டம்களைக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சிப்புக்குள்ளும் 9 லட்சத்துக்கும் அதிகமான ‘ஏஐ கோர்ஸ்’ (AI Cores) உள்ளன. இதுவே உலகின் மிகப்பெரிய சிப் ஆகும்.
இதன் திறன் கற்பனைக்கு அப்பாற்பட்டது. தற்போதைய 10 பீட்டாஃப்ளாப் திறன் கொண்ட இந்தியாவின் ‘ஐராவத்’ சூப்பர் கம்ப்யூட்டரை விட இது சுமார் 800 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. ஐராவத் கணினியில் மூன்று ஆண்டுகள் எடுக்கும் ‘ஏஐ’ பயிற்சியை, இது வெறும் 11 நாள்களில் முடித்துவிடும்.