

பல நாட்கள் தொடர்ந்து விடாமல் மழை பெய்து மக்கள் சிரமப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில், பெருமழை தூறல் ஆக மாறி, வானில் கருமேகங்கள் கலைந்து, சிறிய வெளிச்சம் தெரிந்தால் எப்படி இருக்குமோ, அப்படியிருக்கின்றன இந்திய பங்குச்சந்தைகள் தற்சமயம்.
கடந்த 2 ஆண்டுகளாக பங்கு விலைகளில், சந்தைக் குறியீட்டு எண்களில் ஏற்றம் இல்லை. இத்தனைக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.7% என்ற உயரளவு. பணவீக்கம் கட்டுப்பாட்டில்.
வட்டி விகிதங்கள், வியாபாரங்கள் சமாளிக்க கூடிய அளவில். எல்லாம் இப்படிஇருந்தும் பங்கு விலைகளிலும் சந்தையிலும் ஏற்றமில்லை. உலகெங்கிலும் கோவிட் பரவிய காலகட்டத்தில் இந்திய பங்குச்சந்தைகளின் நிஃப்டி குறியீட்டெண் 11000 முதல் 14,000 வரை இருந்தது.
அந்தப் பிரச்சினைகள் முடிந்ததும், வீறு கொண்டு எழுந்த சந்தை, 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் 26,000 புள்ளிகளுக்கு மேலே போய் புதிய உச்சம் தொட்டது. 2025-26 நிதியாண்டு இந்திய பங்கு சந்தைகளுக்கு சரியாக அமையவில்லை. ஒரு நேரம் 20,182 என்கிற அளவுக்கு கீழ் இறங்கி, பிறகுத் தட்டு தடுமாறி உயர்ந்து, 24,300- க்கு அருகில் நிற்கிறது.
இனி ஏற்றம்தான் என்பது போல பங்குத்தரகில், பங்குகள் முதலீட்டில் அனுபவம் உள்ள சிலர் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அது சரியா? முதலில் பங்குச்சந்தை உயராமல் இருந்ததற்கான காரணங்களை பார்த்துவிட்டு, பிறகு இப்போது நிலைமையில் என்ன மாற்றம் வந்திருக்கிறது, சந்தை ஏன் உயரக்கூடும் என்பதைப் பார்க்கலாம்.
ஏன் உயரவில்லை
பங்குகளின் விலை ஏற்ற இறக்கத்துக்கு 2 முக்கிய காரணங்கள். ஒன்று, அடிப்படைகள் என்ற ’பண்டமென்டல்ஸ்’. இரண்டாவது, வாங்குவது விற்பது தொடர்பான நடவடிக்கைகளின் தாக்கம் தரும் ’டெக்னிக்கல்ஸ்’.
‘பண்டமென்டல்’ சில், நாட்டின் பொருளாதா வளர்ச்சி எப்படி இருக்கிறது? பணவீக்கம் என்ன அளவில் இருக்கிறது? வியாபாரம் நடக்கிறதா? வியாபாரம் செய்யும் நிறுவனங்களின் லாபம் எந்த அளவில் இருக்கிறது? என்பன அடங்கும்.
இவையெல்லாம் பிரமாதமாக இல்லையென்றாலும், மோசமாக இல்லாத நிலைமைதான் இந்தியாவில்.. ஆனாலும் கூட, பங்கு விலைகள் மற்றும் பங்குச்சந்தை குறியீட்டு எண்களில் (இண்டெக்ஸ்) ஏற்றம் இல்லை.