

‘மாதா ஊட்டாத சோறை, மாம்பழம் ஊட்டும்’ என்று சொல்வார்கள். அந்தளவுக்கு சுவை கூட்டும் முக்கனிகளில் ஒன்றுதான் மாம்பழம். அல்போன்சா, கேசர், மல்கோவா, பங்கனப்பள்ளி உட்பட பல இந்திய மாம்பழ ரகங்களுக்கு உலகளவில் தனி சிறப்பு உள்ளது. உலகளவில் மாம்பழங்கள் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சுமார் 1,500 ரகங்கள் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
எனினும், 1,000 மாம்பழ ரகங்கள் வணிக ரீதியாக உள்ளன. குறிப்பாக உத்தர பிரதேசம், ஆந்திரா, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல் (நத்தம்), மதுரை ஆகிய பகுதிகளில் மாம்பழ உற்பத்தி அதிகமாக உள்ளது.
உலகளவில் 50 சதவீத மாம்பழங்களை இந்தியா உற்பத்தி செய்தாலும், அதில் ஒரு சதவீத அளவுக்கே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளுக்கும் இந்திய மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
குறிப்பாக அமெரிக்காவில் இந்திய மாம்பழங்களுக்கு அமோக வரவேற்பு உள்ளது. விமான சரக்குக் கட்டணம் அதிகரிப்பு, போக்குவரத்துத் தடை போன்ற சிக்கல்கள் இருந்தாலும், 2026-ம் ஆண்டுக்கான இந்திய மாம்பழ ஏற்றுமதிக்கு அங்கு அதிக தேவை உள்ளது.
அதிலும் அல்போன்சோ, கேசர் ரக மாம்பழங்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. கடந்த 2024-ம் ஆண்டு மாம்பழங்கள் ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு 60 மில்லியன் டாலர் வருவாய் கிடைத்தது.
ஆனால், இதற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் அளவு, கதிர் வீச்சு போன்ற பிரச்சினைகள் உள்ளன. தவிர பருவம் பொய்த்து போதல் அல்லது திடீரென மழை போன்ற காரணங்களால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.