

புத்தாண்டு (2026) பிறந்த பிறகு உலகின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் எதிர்கால முன்னேற்றம் பற்றிய மூன்று முக்கியமான அறிக்கைகள் சர்வதேச அமைப்புகளால் வெளியிடப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை, உலகப் பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2026 (World Economic Situation and Prospects (WESP 2026) என்ற அறிக்கையை ஜனவரி 8-ல் வெளியிட்டது.
உலக பொருளாதார மன்றம் (World Economic Forum), தலைமைப் பொருளாதார நிபுணரின் கண்ணோட்டம்-2026 என்ற வருடாந்திர அறிக்கையை கடந்த 16-ம் தேதி டாவோஸில் வெளியிட்டது. உலகப் பொருளாதார கண்ணோட்டம் 2026 என்ற அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) கடந்த 19-ம் தேதி வெளியிட்டது.
ஐ.நா. அறிக்கையில், 2025-ல் உலகளாவிய வளர்ச்சி 'மிதமானது' என்றும், அது கரோனா தொற்றுக்கு முன்பு இருந்த நிலைகளுக்குக் கீழேதான் இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2026-ல் வளர்ச்சி 2.7% ஆகக் குறையும்எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது 2025-ல்இருந்த 2.8% வளர்ச்சியைவிட சற்று குறைவானது. உலக வர்த்தக பதற்றம், நிதி அழுத்தங்கள் மற்றும் 'கொள்கை உறுதியின்மை' ஆகியவை முக்கிய தடைகளாகும்.
அதேநேரம், தெற்கு ஆசியா 5.6% வளர்ச்சியுடன் வலுவான இயந்திரமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, 2025-ல் 7.4% என்றசிறப்பான வளர்ச்சி இருந்தது. ஆனால் 2026-ல்அது 6.6% ஆகக் குறையலாம். அதேநேரம்வலுவான உள்நாட்டு நுகர்வு, பெரும் அரசு முதலீடு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) ஆகியவை இந்திய வளர்ச்சியின் முக்கிய இயக்கிகளாகக் கருதப்படுகின்றன.
அதிகரிக்கும் அமெரிக்க சுங்க வரி இந்தியாவுக்கு அபாயமாக இருந்தாலும், இந்தியா ஏற்றுமதி சந்தைகளை விரிவுபடுத்தி, உள்நாட்டு தேவையையும் ஊக்குவிக்க முயற்சிக்கிறது என ஐ.நா. அறிக்கை கூறுகிறது. உலக பொருளாதார மன்ற (டபிள்யூஇஎஃப்) ஆய்வில், 2026-ல் உலக பொருளாதார நிலைமை பலவீனமாகும் என 53% நிபுணர்கள் எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.