

சமீபகாலமாக ஊடகங்களில் வெளியாகும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த செய்திகளில் உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres – GCC), தரவுப் பகுப்பாய்வு மையங்கள் (Data Centres), செய்யறிவு (AI) போன்றவை மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக கூகுள் அடுத்த 5 ஆண்டுகளில் விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்தி வெளியானதிலிருந்து காரசாரமான விவாதங்கள் நடந்தன.
ஜிசிசி என்பவை பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்த, புதுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக வெளிநாடுகளில் நிறுவும் பிரத்யேக மையங்களாகும். இந்தியாவில் சுமார் 1,800 ஜிசிசி-கள் இயங்கி வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இவை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), ஏஐ துறைகளில் முக்கியப் பங்காற்றி வருகின்றன. இந்த மையங்கள் தொடர்ந்து நிறுவப்படுவதால் ஏற்படக்கூடிய சாதக, பாதகங்களை சுருக்கமாகப் பார்க்கலாம். உலக மக்கள் தொகையில் இந்தியா 18% ஆக இருந்தாலும், அனைத்து நன்னீர் இருப்புக்களில் (fresh water) 4% மட்டுமே அணுகும் நிலையில் இருக்கிறது.
இதில் பெரும்பகுதி நிலத்தடி நீர். இருப்பினும், உலகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சுதலில் இந்தியாவின் பங்கு சுமார் 25% ஆகும். இந்தியாவில் கூடுதலாக மாபெரும் ஏஐ தரவு மையங்கள் நிறுவப்படும்போது, பிரச்சினை மேலும் அதிகரிக்கக்கூடும்.
டிஜிட்டல் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பை உருவாக்க பில்லியன் கணக்கான டாலர்களை வெளிநாடுகளிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் முதலீடாக ஈர்த்த போதிலும் ஜிசிசி.களுக்கான இந்தியாவின் திறன் தேவை 2030-ல் 1.5-லிருந்து சுமார் 6.5 கிகாவாட்டாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், நீர் நுகர்வால் எழும் பிரச்சினைகள் மேலும் தீவிரமாகும்.
2023-ல் வழக்கமான ஒரு அமெரிக்க தரவு மையம் 180 கோடி லிட்டர் தண்ணீரை (தினசரி 50 லட்சம் லிட்டர்) நேரடியாக குளிர்விக்கும் நோக்கங்களுக்காகவும், மேலும் 1000 கோடி லிட்டர் நீரை மறைமுகமாக அதன் மின்சாரத் தேவைகளை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தியது. அமெரிக்காவின் அயோவாவில் உள்ள கூகுளின் ஏஐ தரவு மையங்களில் ஒன்று 2024-ம் ஆண்டில் 380 கோடி லிட்டர்களை பயன்படுத்தியது.