

நுகர்வெனும் பெரும்பசி மனிதர்களை இந்தத் தொழில்நுட்ப உலகில் பல வழிகளில் ஆட்கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்திய நுகர்வுக் கலாச்சாரத்தின் கட்டமைப்பு பெரும் மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. நுகர்வோராகிய நாம் முன்பு செலவழித்ததைவிட இப்போது அதிகம் செலவு செய்கிறோம்.
ஆனாலும் உணவுப் பொருட்களுக்கு குறைவாகவும், மற்ற பொருட்களுக்கு அதிகமாக செலவிடுகிறோம் என புள்ளிவிவரம் கூறுகிறது.
ஒரு குடும்பத்தின் மொத்தச் செலவில் உணவுக்கென செலவிடுவது 50 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது.
அதேநேரம் எந்த வருமானப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் ரெஃப்ரிஜிரேட்டர், வாகனங்கள், செல்போன் போன்ற நீண்டநாள் உழைக்கக்கூடிய பொருட்களுக்கு (durable goods) செலவிடுவது அதிகரித்திருக்கிறது.
ஒரு காலத்தில் இந்தப் பொருட்களை நாம் வாங்கமாட்டோமா என்றிருந்த நிலை மாறி இன்றைக்கு பெரும்பாலானோர் வாங்கக்கூடிய அவசியமான பொருட்களாக இவை மாறியிருக்கின்றன.
நாடு முழுவதும் சுமார் 2.5 லட்சம் குடும்பத்தினரிடம் நடத்திய ஆய்வின் முடிவு `வீட்டு நுகர்வுச் செலவு ஆய்வு, 2025 (Household Consumption Expenditure Survey – HCSE)’ என்கிற பெயரில் அறிக்கையாக வெளியாகி இருக்கிறது.
இதில் பங்கேற்றவர்களில் 60% பேர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஆய்வில் உணவுப் பொருட்களான தானியங்கள், பால் போன்றவையும் எரிபொருள் நுகர்வு, மருத்துவச் செலவு மற்றும் பல்வேறு வகையான நீண்டகாலம் உழைக்கக்கூடிய பொருட்கள் குறித்தும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
அதிகரித்து வரும் வருமானம், மாறிவரும் முன்னுரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமைகளை இந்தியக் குடும்பத்தினர் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கண்டறிவது இந்த ஆய்வின் நோக்கமாக இருந்தது. உணவுக்காகச் செலவழிக்கும் தொகை தொடர்ந்து குறைந்து வருவதும், நீண்டகாலம் உழைக்கும் பொருட்களின் மீது செலவழிக்கும் தொகை அதிகரித்து வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.