

கடந்த மார்ச் 31-ம் தேதி காலை (நிதியாண்டின் கடைசி நாள்) ஆரக்கிள் கார்ப்பரேஷன் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 18% (30,000) பேருக்கு ஓர் மின் அஞ்சல் வந்திருக்கிறது. ‘உங்கள் வேலை குறித்து முக்கியமான தகவல்’ என்ற தலைப்பிடப்பட்டிருந்த அதில், "சிரமம் தரும் தகவலைப் பகிர்கிறோம்.
நிறுவனத்தின் வியாபார தேவைகளைக் கருத்தில் கொண்டு கவனமாக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, இன்று உங்கள் கடைசி வேலை நாள். இனி நீங்கள் நிறுவனத்தின் மின்னஞ்சல், மடிக்கணினி (மூலம்) கோப்புகளைப் பார்க்க இயலாது.
உங்களுக்கு வழங்கப்பட இருக்கிற தொகை பற்றிய விவரம் தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்படிக்கு ஆரக்கிள் நிர்வாக தலைவர்கள்" என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அப்படி வேலை இழந்தவர்களில் 12 ஆயிரம் பேர், சீனியர் இன்ஜினியர்கள், ஆர்க்கிடெக்ட் ஆபரேஷன் லீடர்ஸ், ப்ரோக்ராம் மேனேஜர், டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட் என பல வேலைகள் செய்துகொண்டிருந்த இந்தியர்கள். எவருக்கும் வேலையிலிருந்து விலக ‘நோட்டீஸ் பீரியட்’ காலமோ, வேறு அவகாசமோ கொடுக்கப்படவில்லை.
உடனடியாக நீங்கள் அதற்குரிய ஆவணத்தில் (DocuSign packet) கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. மேல் விவரங்கள் தெரிந்து கொள்ள ‘டோல் ஃப்ரீ’ எண் கொடுத்திருக்கிறார்கள். வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும், இந்த நடவடிக்கைக்கு காரணம், நிறுவனத்தின் செலவைக் குறைப்பதுதான்.
டேட்டா சென்டர்கள்
கடந்த சில ஆண்டுகளாக மைக்ரோசாப்ட், கூகுள், அமேசான் போன்ற பெரு நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சேவை தர, மிகப்பெரும் செலவில் ‘ஏஐ டேட்டா சென்டர்’ உருவாக்கி வரும் நிலையில், போட்டியைச் சமாளிக்க ஆரக்கிள் நிறுவனமும், 58 பில்லியன் டாலர் செலவில் ஓர் ‘டேட்டா சென்டர்’ நிறுவுகிறது.
அதனால் நிறுவனத்தின் மொத்த கடன் தொகை 100 பில்லியன் டாலரைத் தொட்டிருக்கிறது. டேட்டா சென்டர் வருமானம் எப்போதிலிருந்து எவ்வளவு என்று தெரியாத நிலையில், 2025 செப்டம்பரில் 340 டாலர் விலையிலிருந்த ஆரக்கிள் நிறுவனத்தின் பங்கு விலை தொடர்ந்து சரிந்து, 140 டாலருக்கு கீழ் உள்ளது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் (ஐ.டி.) மனிதர்கள் செய்யக்கூடிய சில வேலைகளை, மனிதர்களை விட வேகமாகவும் துல்லியமாகவும் ஏஐ செய்யும் என்பதால், ‘ஏஐ ஜெனரேட்டிவ்’ என்ற தொழில்நுட்பத்துக்கு தேவைப்படும்’ டேட்டா சென்டர்’ உருவாக்கு வதில் நிறுவனங்கள் பெரும் பணம்முதலீடு செய்கின்றன.