

கல்வித்துறையில் செய்யறிவின் பங்கு அபரிமிதமானது. மூன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் தொடங்கி முனைவர் பட்ட ஆய்வு மாணவர்கள் வரை அனைவரின் கைகளிலும் செய்யறிவுக் கருவிகள் வந்துவிட்டன. இது நல்லதுதானா? ஆம் என்கிறது ஒரு தரப்பு. இல்லையென்று சொல்பவர்களும் உண்டு.
கல்வியில் தொழில்நுட்பம் என்பது புதிதல்ல. காலந்தோறும் கல்விக்கூடங்களில் புதுப்புது தொழில்நுட்பங்கள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆயினும் இப்போதும் நடப்பது பத்தோடு பதினொன்று அல்ல.
முன்பு வந்த தொழில்நுட்பங்களுக்கும் செய்யறிவுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் உள்ளன. கரும்பலகை இருந்தது. அதற்குப் பதிலாக ஸ்மார்ட் போர்ட்கள் வந்தன. அதுபோலத்தானே செய்யறிவும் என்றால் இல்லை. கற்றல் கற்பித்தல் செயல்பாட்டையே மாற்ற வல்லது செய்யறிவு. இது குறித்தான சாதக பாதகங்களைத் தெரிந்துகொள்வோம்.
நல்லனவற்றிலிருந்து தொடங்குவோம். சராசரியாக நம்முடைய வகுப்பறைகளில் நாற்பது மாணவர்கள் உள்ளனர். ஒரே ஓர் ஆசிரியர். அனைவருக்கும் ஒரே பாடம். ஒரே வேகம். இங்குதான் சிக்கல். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வேகத்தில் கற்கும்.
அதுமட்டுமல்ல. ஒரு மாணவனே வெவ்வேறு பாடங்களை வெவ்வேறு வேகத்தில் கற்கக்கூடும். இயற்பியலை வேகமாகக் கற்கும் மாணவர் ஒருவருக்கு உயிரியல் கசக்கலாம். செய்யறிவு பெரிதளவில் உதவி செய்யவிருப்பது இங்குதான். பெர்ஸ்னலைஸ்டு லேர்னிங் என்று ஒன்று இருக்கிறது.
அதாவது உங்களுக்கு என்ன வேகத்தில் புரிகிறதோ அந்த வேகத்தில் கற்பது. வேகம் மட்டுமல்ல. ஆழமும் மாணவரின் ஆர்வத்துக்கேற்பத் தீர்மானிக்கப்படும். இன்று கூட எல்எல்எம் என்னும் மொழிமாதிரிகளில் இந்த வசதி உள்ளது.
கடினமான டாப்பிக் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள். ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு விளக்குவது போலச் சொல் என்றால் சமத்தாகச் சொல்லும் செய்யறிவு. ஒரு மாணவனுக்கு ரஜினிகாந்த் பிடிக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்.