Published : 20 Dec 2021 10:47 AM
Last Updated : 20 Dec 2021 10:47 AM

ஒரே திட்டம் பன்முக முதலீடு!

சாமிநாதன் வெங்கட்ராமன்

முதலீடுகளை எடுத்துக் கொண்டால் ஒரே திட்டத்தில் முழு முதலீடையும் மேற்கொள்ளாமல் பல திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யும் பாரம்பரிய முறையே புத்திசாலித்தனமானதாக இருக்கும். காளையின் பாய்ச்சல் அதிகமாக உள்ள இப்போதைய சூழலில் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பங்குச் சந்தையில் மட்டுமே முதலீடு செய்வது சரியான உத்தியாக இருக்காது.

உங்களை அதைரியப்படுத்தும் நோக்கத்தில் கூறும் ஆலோசனையாக இதை நிச்சயம் நினைக்க வேண்டாம். பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்க சூழலால் ஏற்படும் அபாயத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதுதான் நோக்கமாகும்.
உங்களது முதலீடுகளை பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யும்போது அவை ஒவ்வொன்றும் மாறும் சூழலுக்கு ஏற்ப செயல்படும் தன்மை கொண்டவையாக இருக்கும்.

உதாரணமாக 2020-ம் ஆண்டு தொடக்கம் முதல் அரையாண்டு வரை பங்குச் சந்தையில் சரிவான சூழலே நிலவியது. இதற்கு கரோனா வைரஸ் பரவல் முக்கிய காரணமாக அமைந்தது. பங்குச் சந்தை தடுமாற்றத்தைச் சந்தித்தாலும் தங்கத்தில் முதலீடு அதிகரித்தது. இதனால் தங்க சந்தை ஏறுமுகம் கண்டது. ஆனால் பல சமயங்களில் தங்க முதலீடு மற்றும் கடன் பத்திர முதலீடுகளைவிட பங்குச் சந்தை முதலீடுகள் லாபகரமாக அமைந்துள்ளன. இந்த சூழல் அவ்வப்போது மாறுவதுண்டு. உதாரணத்துக்கும் 2013-ம் ஆண்டு தங்க முதலீடுகள் மூலம் கிடைத்த ஆதாயம் மைனஸ் 28 சதவீதம். ஆனால் அதே ஆண்டு பங்குச் சந்தை முதலீடுகள் ஈட்டிய லாபம் 9 சதவீதமாகும்.

முதலீடுகளை பல திட்டங்களில் முதலீடு செய்யும்போது சில திட்டங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு நஷ்டமேற்படுத்தும் பங்குகளால் ஏற்படும் இழப்பைக் குறைத்துவிடும்.

மாற்று முதலீடுகள் எவை?

பொதுவாக பெரும்பாலானோர் நிரந்தர சேமிப்புகள் மற்றும் கடன் பத்திர முதலீடுகளையே தேர்வு செய்வர். இவை பெரும்பாலும் குறைந்த வருமானத்தை நிரந்தரமாக அளிப்பவையாக இருக்கும். சந்தையில் இப்போது புதிதாக வந்துள்ள முதலீட்டுத் திட்டங்கள் அவ்வளவாக எதிர்பார்த்த பலனை அளிப்பவையாக இல்லை. இவற்றுக்கெல்லாம் மேலாக வழக்கமான முதலீட்டுத் திட்டங்களாக தங்க முதலீடு அல்லது ரியல் எஸ்டேட் முதலீடுகள் கருதப்படுகின்றன. பொதுவாக இவை அனைத்திலும் முதலீடு செய்வது உகந்த முடிவாக இருக்கும்.

ஆனால் அந்த முதலீடானது பரவலாக இருக்க வேண்டும். பங்குச் சந்தை முதலீடானது ஒரு குறிப்பிட்ட காலத்தில் உங்களது மூலதனத்திற்கு உரிய லாபத்தை ஈட்டித் தரலாம். கடன் பத்திரங்கள் உறுதியான உத்திரவாதமான லாபத்தை தரும். ஆனால் தங்க முதலீடானது பண வீக்கத்துக்கேற்ப மாறுபடும் தன்மை கொண்டது. பிற முதலீடுகளில் ரியல் எஸ்டேட் முதலீடானது ரெய்ட்ஸ் மற்றும் இன்விட்ஸ் போன்றவற்றில் முதலீடு செய்வது சிறப்பான பலனைத் தருவதாக இருக்கும்.

பணிக் காலம் அதிகம் உள்ள ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அவர்கள் ரிஸ்க் எடுக்கலாம். அதற்கேற்ப பங்குச் சந்தையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளலாம். பிற முதலீட்டு திட்டங்களில் குறைவான அளவு முதலீடு செய்யலாம். அதேசமயம் ஓய்வு பெறும் காலத்தை நெருங்கியவர்கள் பங்குச் சந்தை முதலீடுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

அதேசமயம் கடன் பத்திரம் உள்ளிட்ட பிற முதலீட்டுத் திட்டங்களை அதிகரித்துக் கொள்ள வேண்டும். எவற்றில் எந்த அளவு முதலீடு செய்வது என்று யோசித்து செயல்படுவது மிகவும் சிரமமான விஷயம். அதிலும் குறிப்பாக சில்லரை முதலீட்டாளர்களுக்கு இது பெரும் சவலான விஷயமே. எந்த முதலீடுகள் பலன் தரும் என்பதை கணித்து அதில் முதலீடு செய்வது என்பதற்கு இதில் நிபுணத்துவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

இதற்கான உத்தி

பல்வேறு முதலீடுகளில் முதலீடு செய்வதற்கு குழம்பும் சில்லரை முதலீட்டாளர்கள் பன்முக சொத்து பகிர்வு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். பல்வேறு முதலீட்டு நிறுவனங்களும் இத்தகைய வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. அந்த வகையில் சிறப்பாக செயல்பட்டு நிரந்தரமான வருவாய் ஈட்டித் தரும் திட்டமாக விளங்குகிறது ஐசிஐசிஐ புரூடென்ஷியல் மல்டி அசெட் பண்ட்.

சாமிநாதன் வெங்கட்ராமன்
நிறுவனர், தேஜா வெல்த் வேவ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x