Published : 21 Mar 2016 11:47 AM
Last Updated : 21 Mar 2016 11:47 AM

உன்னால் முடியும்: கார்ப்பரேட் வாழ்க்கையில் திருப்தியில்லை

இந்தியாவின் மிகச் சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனமான ஐஐஎம் அகமதாபாத் நிறுவனத்தில் படித்து டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்தவர் மதுசூதனன். ‘‘தொழில் ஆலோசகர், வென்ச்சர் கேபிடல் நிறுவன பணி என பரபரப்பான வாழ்க்கை முறை மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. ஏதோ ஒன்றை இழந்ததுபோல இருக்கும். அதனால்தான் அந்த வாழ்க்கையைத் தொடரவில்லை. அதிலிருந்து வெளியேறி சின்னதாக தொடங்கிய சொந்த தொழில்தான் ``தானியம்’’ இயற்கை பொருட்கள் விற்பனை மையம்’’ என உற்சாகமாக பேச ஆரம்பித்தார். அவரது அனுபவம் இந்த வாரம் இடம் பெறுகிறது.

சொந்த ஊர் கல்பாக்கம், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பிடெக் பட்டமும், அகமதாபாத் ஐஐஎம் நிறுவனத்தில் உயர் கல்வியும் முடித்துவிட்டு டெல்லியில் தொழில் ஆலோசகராக இருந்தேன். பிறகு ஒரு வென்ச்சர் முதலீட்டு நிறுவனத்தில் பணியாற்றினேன். பரபரப்பான வாழ்க்கை முறையில் நின்று நிதானமாக ஒரு வேளை உணவுகூட சாப்பிட முடியாது. நல்ல வருமானம் இருந்தாலும், என்னடா வாழ்க்கை என்று தோன்றும். இரண்டரை ஆண்டுகள் இந்த பணியில் இருந்தேன். இந்த வேலைகளை விட்டுவிட்டு அமைதியாக ஒரு வாழ்க்கை வாழலாம் என்று யோசித்தேன். நல்ல உணவு, சுத்தமான காற்று, ஆரோக்கியமான வாழ்க்கை இது போதும் வாழ்க்கையை சந்தோஷமாக வாழலாம் என்பது எனது எண்ணம். இதற்கு ஏற்ப நமது தேவை களுக்கும் வருமானத்துக்கு சிறியதாக ஒரு தொழில் ஆரம்பித்துக் கொண்டு ஊருக்கே சென்றுவிடலாம் என்று திட்டமிட்டேன். செய்கிற வேலை சமுதாயத்துக்கும் பயன்பட வேண்டும், நமக்கு குறைந்த லாபத்தைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் எனது தொழில் திட்டம்.

இப்படி திட்டமிடுகிறபோதே ஆர்கானிக் பொருட்கள் விற்பனை என்கிற எண்ணம் வந்தது. ஏனென்றால் நான் அதுகுறித்து எழுந்த ஆர்வத்தால் அவ்வப்போது பல தகவல்களையும் சேகரித்து வைத்திருந்தேன். மனைவியிடம் யோசனையை சொன்னதும் அவருக்கும் முழு ஈடுபாடு. இதற்கான முதல் நாள் திட்டமிடலில் இருந்தே அவரும் என்னுடன் பயணித்தது எனக்கு மிகப்பெரிய பலம்.

எந்த தொழிலாக இருந்தாலும் தெளிவான நிர்வாக திறமையும் இலக்கும் வேண்டும். அதை எனது கல்வி கொடுத்தது. ஆனால் ஆர்கானிக் குறித்த அனுபவத்தை தேடித் தேடித்தான் தெரிந்து கொண்டேன். அதை அனுபவம்தான் கொடுத்தது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் சென்னையில் முதன் முதலில் 2010ல் ஆர்கானிக் பொருட்களை விற்பனை செய்யும் கடையை தி. நகரில் தொடங்கினோம். முதல் இரண்டு ஆண்டுகள் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆனாலும் இதற்கான உழைப்பை விடவில்லை. ஆர்கானிக் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள், விவசாயிகள் என நேரடியாக சென்று கொள்முதல் செய்வது, அறிந்து கொள்வது என தினசரி வேலைகள் செய்து கொண்டே இருப்பேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த வரவேற்பினை பொறுத்து அண்ணா நகர் அடையாறு என கிளைகளைத் திறந்தோம்.

சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும் அத்தனை பொருட்களும் ஆர்கானிக் பொருட்களிலும் கிடைக்கும். ஆனால் ஒரு சீசனில் இயற்கையாக விளையும் பொருள் எங்களிடம் கிடைக்கிறது, அது இருப்பு தீர்ந்துவிட்டது என்றால், அந்த பொருள் மீண்டும் வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக எந்த சமரசமும் செய்து கொள்வதில்லை. செயற்கை உரங்கள் கொண்டு விளைவிப்பதை கொடுப்பதில்லை. 100 சதவீதம் ஆர்கானிக் என்பதை உறுதியாகக் கடைப்பிடிக்கிறோம்

இதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலிருந்தும் இயற்கை விவசாய ஆர்வலர்கள், விற்பனையாளர் கள், சான்றிதழ் பெற்ற விவசாயிகள் என நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வைத்துள் ளோம். தற்போது நிரந்தரமாக 20 நபர்களுக்கு வேலை வாய்ப்பு இதன் மூலம் உருவாகியுள்ளது. அவ்வப்போது தேவைக்கு ஏற்ப புதியவர்களையும் இணைத்துக் கொள்கிறோம். ஆன்லைன் சந்தை மூலமும் விற்பனை நடந்து வருகிறது.

சம்பளம் வாங்கியபோது கிடைக்காத திருப்தி இப்போது நல்ல பொருட்களை மக்களுக்கு கொடுக்கிறபோது கிடைக் கிறது. அதே சமயத்தில் நான் வேலையில் இருந்திருந்தால் என்ன சம்பளம் கிடைக்குமோ, அதே அளவு வருமானமும் கிடைக்கிறது. இதைவிட எனக்கு வேறென்ன மகிழ்ச்சி வேண்டும் என்றார்.

உயர் பதவியோ, சொந்தத் தொழிலோ இரண்டு வாய்ப்புகளையும் ஐஐஎம் கல்வி இவருக்கு வழங்கியிருக்கும். ஆனால் இதுதான் திருப்தி என்பதுதான் இவரது வெற்றியின் ரகசியம்.

பரபரப்பான வாழ்க்கை முறையில் நின்று நிதானமாக ஒரு வேளை உணவுகூட சாப்பிட முடியாது. நல்ல வருமானம் இருந்தாலும், என்னடா வாழ்க்கை என்று தோன்றும். இரண்டரை ஆண்டுகள் இந்த பணியில் இருந்தேன். இந்த வேலைகளை விட்டுவிட்டு அமைதியாக ஒரு வாழ்க்கை வாழலாம் என்று யோசித்தேன்.

- maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x