Published : 21 Sep 2015 11:49 AM
Last Updated : 21 Sep 2015 11:49 AM

உன்னால் முடியும்: அமெரிக்க கனவு அவசியமில்லை

எம்எஸ்இ ஐடி படித்துவிட்டு அமெரிக் கவுக்கோ, ஐடி நிறுவன வேலை களுக்கோ கனவு காணும் இளைஞர்களுக்கு மத்தியில் சொந்த ஊரில் காகித அட்டை தயாரிக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார் பிரேம். பொள்ளாச்சி அருகில் உள்ள மடத்துகுளம் கிராமத்தில் இவரது ஆலை உள்ளது.

ஒரு இடத்தை ஒத்திக்கு எடுத்து, சிறிய அளவில் சாதாரண காகித அட்டை தயாரிக்கும் தொழிலில் இறங்கியவர், இன்று சொந்த இடத்தில் 20-க்கும் மேற்பட்ட காகித அட்டைகளை தயாரித்து வருகிறார். 33 வயதுக்குள் இவருடைய அசராத உழைப்பு இவரை 20 பேருக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கும் தொழில் முனைவராக உருவாக்கியுள்ளது. இவரது அனுபவத்தை இந்த வாரம் நமது வணிக வீதி வாசகர்களுக்காக..

எனது அண்ணன் அப்போது வேறொரு கம்பெனியில் இந்த வேலையை செய்து கொண்டிருந்தார். எனக்கு வேலை தெரியாது என்றாலும் அண்ணனுக்கு உள்ள அனுபவம் எனக்கு உள்ள ஆர்வம் ரெண்டையும் கணக்கிலெடுத்து நிறுவனத்தை தொடங்கலாம் என்கிற நம்பிக்கை வந்தது.

நானும் இந்த வேலைகளில் உள்ள நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ள திட்டமிட்டு எங்கள் பகுதியில் உள்ள சில கம்பெனியில் வேலைக்கு செல்ல தொடங்கினேன்.

பொதுவாக இந்த தொழிலுக்கான மூலப் பொருள், மார்கெட்டிங் என எல்லா வேலைகளும் அண்ணனுக்கு தெரியும் என்றாலும், நானும் தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்பதால் அதுவும் எனது பயிற்சியாக இருந்தது.

மடத்துகுளம் ஏரியாவில் பல காகித அட்டை நிறுவனங்கள் உள்ளன. இவர் களோடு போட்டி போட வேண்டும் என்றால் ஏதாவது ஒரு விஷயத்தில் தனியாக தெரிய வேண்டும்.

ஆனால் எங்களிடம் பெரிய முதலீடுகள் கிடையாது. சிறிய அளவில்தான் தொடங்குகிறோம். ஒரே ஒரு வகையிலான போர்டு தயாரிக்கும் அளவுக்குத்தான் இயந்திர திறன் இருந்தது. இப்படி பல சவால்கள் இருந்தன.

முதலில் ஆரம்ப தரத்திலான போர்டு தான் தயாரிக்கத் தொடங்கினோம். மூலப் பொருள் தேவைக்கும், தொடர்ச்சியாகக் கிடைப்பதற்கும் பல ஊர்களுக்குச் அலைந்திருக்கிறேன்.

கொடைக்கானலில் இருந்து தொடர்ச்சி யாக மூலப் பொருள் கிடைப்பதுபோல ஏற்பாடு செய்து கொண்டேன். சந்தைையப் பொறுத்தவரை தரத்துக்குத் தான் முக்கியத்துவம் தருவார்கள். மதுரை, சென்னை, சிவகாசி, பெங்களூரு என முக்கிய நகரங்களில் உள்ள நோட்டு தயாரிப்பவர்களிடம் ஆர்டர் வாங்கினால் இந்த சவால்களை சமாளிக்கலாம் என்பதால் இதற்காக அலையத் தொடங்கினேன்.

மதுரையில் சில நிறுவனங்களிலிருந்து ஆர்டர் கிடைத்தது. அவர்களது தேவைக்கு தரமாக கொடுக்க கொடுக்க மேலும் ஆர்டர் கிடைத்தது. அதைக் கொண்டு அடுத்த அடுத்த ஜிஎஸ்எம் அட்டைகள் தயாரிக்கத் தொடங்கினோம்.

இப்படியே ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்டர் கிடைக்க கிடைக்க தயாரிக்க தொடங்கி இந்த மூன்று வருடத்தில் தற்போது பதினைந்துக்கும் மேற்பட்ட தரத்திலான அட்டைகளை தயாரித்து வருகிறோம்.

இதற்கிடையே எங்களது வேலை களுக்கு பொருத்தமான இடம் கிடைக்க அந்த இடத்தையும் வாங்கியிருக்கிறோம். குத்தகை இடத்திலிருந்து சொந்த இடத்துக்கு மாறியதுகூட எங்களை பொறுத்தவரை பெரிய வளர்ச்சியாகவே கருதுகிறேன்.

தவிர இந்த தொழிலில் ஈடுபட் டிருப்பவர்கள் எல்லோருமே பழுத்த அனுபவசாலிகளாக இருக்க 32 வயதில் இந்த தொழிலில் ஈடுபட்டு போட்டி போடுவதும்,பெரிய நிறுவனங் களிலிருந்து ஆர்டர் வாங்குவதும் சவாலானதுதான்.

ஐடி படித்ததால் அமெரிக்க கனவு காண வேண்டும் என்கிற அவசியமில்லை. காகித அட்டை தயாரிப்பாளராக உள்ளூரிலேயே பிசினஸ் செய்து வெற்றியாளராக வலம் வர முடியும் என்பதற்கு உதாரணமாக இருக்கிறார் பிரேம்.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x