Published : 07 Sep 2020 08:58 AM
Last Updated : 07 Sep 2020 08:58 AM

ஜிடிபி வீழ்ச்சி: எல்லாம் அவன் செயல்

riyas.ma@hindutamil.co.in

இந்தியாவின் ஜிடிபி நடப்பு நிதி ஆண்டின் முதலாம் காலாண்டில் -23.9 சதவீதமாக குறைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரோனா பரவலால் உலக நாடுகள் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியதால் உலகளாவிய அளவில் பொருளாதாரம் சரிவைக்காணும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

எனினும், ஏனைய நாடுகளைவிடவும் இந்தியா மிக மோசமான சரிவை எதிர்கொண்டிருப்பதே அதிர்ச்சிக்கு காரணமாக உள்ளது.நடப்பு நிதி ஆண்டில் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் சீனா மற்றும் இந்தியாவின் ஜிடிபி மட்டுமே எதிர்நிலைக்கு செல்லாது என்று கணிக்கப்பட்டது. ஆனால், தற்போது சீனா 3.2 வளர்ச்சியைக் கொண்டிருக்கையில் இந்தியாவோ அதன் பொருளாதார வரலாற்றில் மிகப் பெரிய சரிவைக் கண்டுள்ளது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தி தொடர்பான காலாண்டு விவரங்கள் 1996 முதல் வெளியிடப்பட்டு வருகிறது. 24 ஆண்டுகளில் தற்போதுதான் முதன் முறையாக இந்தியா எதிர்நிலைக்குச் சென்றுள்ளது.

நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஊரடங்கு மிகத் தீவிரமாக இருந்தது.மக்கள் வீட்டை விட்டு வெளியேவரக் கட்டுப்பாடு, பொதுப் போக்குவரத்து முடக்கம், தொழில்நிறுவனங்களில் உற்பத்தி நிறுத்தம் என அனைத்து செயல்பாடுகளும் முடக்கம் கண்டன. விளைவாக, முதலாம் காலாண்டில் கட்டுமானத்துறை -50 சதவீதம், உற்பத்தித் துறை -39 சதவீதம், சுரங்கம் -23 சதவீதம் விடுதிகள் மற்றும் அது தொடர்பான சேவைகள் -47 சதவீதம் அளவில் சரிந்துள்ளன.

நாட்டின் ஜிடிபியில் மக்களின் நுகர்வு 55சதவீதம் அளவில் பங்கு வகித்துவருகிற நிலையில், முதலாம் காலாண்டில் மக்களின் நுகர்வு பெரிய அளவில் குறைந்து இருப்பது ஜிடிபி சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. தற்போதைய சூழலில் நடப்பு நிதி ஆண்டு முழுமைக்குமாக ஜிடிபி -7 சதவீதமாக குறையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியா தற்போது எதிர்கொண்டிருக்கும் சரிவை கரோனாவுடன் தொடர்புபடுத்தி மத்திய அரசு தப்பித்துக்கொள்ள முயல்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ ஜிடிபி வீழ்ச்சிக்கு கடவுள் மேல் பழியைப் போடுகிறார். 2016-க்குப் பிறகே இந்தியாவின் பொருளாதாரம் தடுமாற்றத்தை சந்திக்கத் தொடங்கிவிட்டது.

பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறையான தாக்கத்தை செலுத்தி இருக்கின்றன. சென்ற நிதி ஆண்டின் ஒவ்வொரு காலாண்டிலும் இந்தியாவின் ஜிடிபி அதன் முந்தைய ஆண்டுகளைவிட பெரிய சரிவைக் கண்டது. வாகனத் துறை பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. ரியல் எஸ்டேட், உற்பத்தி துறை என பொருளாதார வளர்ச்சியை சாத்தியப்படுத்தும் அனைத்து துறைகளும் மிக மோசமான சூழலுக்குச்சென்றன. தற்போது அந்த நெருக்கடி நிலை கரோனாவால் மேலும் தீவிரமடைந்துள்ளது.

2014-ஆண்டு மோடி பிரதமர் வேட்பாளாரக முன்னிறுத்தப்பட்டபோது, குஜராத்தில் அவர் பொருளாதார சாதனை நிகழ்த்தி இருப்பதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்தியாவின் பொருளாதாரத்தை மோடி தூக்கி நிறுத்துவார் என்றே அவர் மீதான பிம்பம் கட்டமைக்கப்பட்டது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்றதும், அவை அனைத்தும் வெறும் பிரச்சார உத்திகள் என்பது உறுதியாகின. சில மாதங்களுக்கு முன்பு பிரஞ்சு பொருளாதார அறிஞர் கை சோர்மன், மோடியின் அரசியல் செயல்பாடுகள் குறித்து மிக முக்கியமான விமர்சனத்தை முன்வைத்தார்.

பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தியே ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான அரசு, தற்போது பொருளாதாரம் தொடர்பான இலக்குகளிலிருந்து 2விலகி மத அரசியலில் தீவிரம்காட்டி வருகிறது. இந்தியாவின் நிலவும் அரசியல் சச்சரவு மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் மீது எதிர்மறையான பிம்பத்தை உருவாக்குகிறது. இதனால் பிற நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய அச்சம் கொள்கின்றன என்ற ரீதியில் அவர் கருத்து தெரிவித்து இருந்தார்.

ரகுராம் ராஜன் உட்பட பல பொருளாதார அறிஞர்கள் மோடி தலைமையிலான அரசின் பொருளாதார நடவடிக்கைகளில் உள்ள தவறுகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். ஆனால் அவை எவற்றுக்கும் செவி சாய்க்காமல், அந்த விமர்சனங்கள் தொடர்பாக தெளிவுகளை அளிக்காமல் மத்திய அரசு தொடர்ந்து தன்போக்கில் முடிவுகளை எடுத்து வருகிறது. நாடோ பெரும் பிளவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மோடியோ மயிலுடன் புகைப்படத்துக்குக் காட்சிக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x