Last Updated : 13 Jul, 2015 11:29 AM

 

Published : 13 Jul 2015 11:29 AM
Last Updated : 13 Jul 2015 11:29 AM

டிராகனின் பிடி தளர்கிறதா?

பங்குச்சந்தைகள் சரிவதும் உயர் வதும் வழக்கமான விஷயங் கள்தான். இன்னும் சொல்லப் போனால் ஏற்ற இறக்கங்களால்தான் பங்குச்சந்தை செயல்பட்டு கொண் டிருக்கிறது. ஆனால் சமீபத்தில் சீன பங்குச்சந்தையின் சரிவு வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி புதிய உச்சத்தை சீன பங்குச் சந்தைகள் தொட்டன. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 150 சதவீதம் உயர்ந்தன. அதிலிருந்து 30 சதவீதம் வரை கடந்த மூன்று வாரங்களில் சரிந்திருக்கிறது. ஜூலை 8-ம் தேதி 6 சதவீதம் சரிந்தது. அதன் பிறகு ஏற்றம் இருந்தாலும் இந்த சரிவு தொடரும் என்பதே பெரும்பாலான சந்தை நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

சரிவுக்கு என்ன காரணம்?

சீனப் பங்குச்சந்தையின் சரிவுக்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலில் பங்குச்சந்தை வேகமாக உயர்ந்த போதே பல நிபுணர்கள் எச்சரித்தார்கள். பொருளாதார வளர்ச்சியின் கண்ணாடி தான் பங்குச்சந்தை. ஆனால் கடந்த சில மாதங்களாக பொருளாதாரத்தை பற்றிய நல்ல செய்திகள் இல்லாதபோதே பங்குச்சந்தைகள் வேகமாக உயர்ந்து வந்தன.

உண்மையான பொருளா தாரத்துக்கும், பங்கு விற்பனை விலையில் இருக்கும் வேறுபாட்டையும் பின்வரும் உதாரணம் மூலம் புரிந்துகொள்ள முடியும். சீனாவில் வர்த்தகமாகும் முக்கியமான உலோகங்களின் விலை 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையிலேயே இருக்கின்றன. ஆனால் உலோக துறை பங்குகள் மட்டும் ஒரு ஆண்டில் சுமார் 100 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த ஒரு உதாரணம் போதும் சீனாவின் பங்குச் சந்தை நிலவரத்தை புரிந்து கொள்ளலாம்.

தவிர, பங்குச்சந்தை குறித்து அரசாங்கம் ஏற்படுத்திய நம்பிக்கையும் சீன பங்குச்சந்தை சரிய ஒரு காரணமாக இருக்கிறது. `சீனப் பங்குசந்தையின் ஏற்றம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. பங்குகளை வாங்குவது என்பது, சீனாவின் கனவுகளில் முதலீடு செய்வது என்று சீனப் பத்திரிகைகள் எழுதின’. இதனால் சிறு முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதற்கு குவிந்தனர்.

இந்திய பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பங்கு மிகவும் குறைவு. ஆனால் சீன பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பங்கு சுமார் 85 சதவீதம் இருக்கிறது. தவிர 20 கோடி சிறு வர்த்தகர்கள் அடிக்கடி வர்த்தகம் செய்பவர்களாக இருக்கிறார்கள்.

நடப்பு ஆண்டில் சுமார் 3 கோடி புதிய பங்கு முதலீட்டாளர்கள் கணக்கினை தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் மூன்றில் இருவர் பள்ளிப்படிப்பை கூட தாண்டாதவர்கள். பங்குச்சந்தை தொடர்ந்து உயர்வதால் பங்கு வர்த்த கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். பலர் செய்து வரும் வேலையை விட்டுவிட்டு வர்த்தகத்தை முழு நேர தொழிலாக மாற்றிக் கொண்டிருக் கிறார்கள்.

பலர் கடன் வாங்கி வர்த்தகம் செய்திருக் கின்றனர். இது தவிர அதிக மார்ஜினில் வர்த்தகம் செய்திருக்கிறார்கள். அதாவது 100 ரூபாய் செலுத்தி 1000 ரூபாய்க்கு வர்த்தகம் செய்வது. சிறிய சரிவு வந்தாலும், முதலீடு செய்த 100 ரூபாய் காணாமல் போகும் நிலைமை ஏற்படும். பல சிறு முதலீட்டாளர்கள் வீடுகளை அடகு வைத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். தற்போதைய இந்த சரிவினால் 3 லட்சம் கோடி டாலர் சொத்துகளை சீனாவின் சிறு முதலீட்டளர்கள் இழந்திருக்கிறார்கள்.

ஐபிஓ சந்தை

சீன சந்தையின் உயர்வு மற்றும் சரிவுக்கு ஐபிஓ சந்தையும் இன்னொரு முக்கிய காரணமாகும். இந்தியா அல்லது அமெரிக்காவில் பட்டியலிடப்படும் பங்கு கள் பிரீமியம் விலையில் பட்டியலிடப் படும். ஆனால் சீனாவில் பங்குகள் குறைந்த விலையில் பட்டியலிடப்படும். இதனால் பட்டியலிடும் அன்று மட்டும் சராசரியாக 130 சதவீதம் அளவுக்கு லாபம் கிடைப்பதால் பல முதலீட்டாளர்கள் புதிதாக பங்குச் சந்தைக்கு வந்திருக்கிறார் கள்.

பங்கு சந்தை சரிய ஆரம்பித்த வுடன் புதிய ஐபிஓ வெளியிட தடைவிதித் திருக்கிறார்கள். அதாவது புதிய ஐபிஓ வெளியாகவில்லை என்றால், முதலீட் டாளர்களின் பணம் ஏற்கெனவே இருக்கும் பங்குகளில் முதலீடு செய்யப்படும். அத னால் சரிவு தடுக்கப்படும் என்று நினைத்து இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த தடையினால் சரிவினை தடுக்க முடியவில்லை.

அடுத்தது என்ன?

பங்குச் சந்தை சரிவினைக் கட்டுப்படுத்த, அல்லது பங்குச் சந்தையை ஊக்கப்படுத்த சீனா பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதுவரை நான்கு முறை வட்டி குறைப்பு செய்துள்ளது. சீனாவில் பெரும்பாலான புரோக்கரேஜ் நிறுவனங்கள் அரசு வசம் உள்ளன. இந்த நிறுவனங்கள் புளூசிப் பங்குகள் வாங்குவதற்கு ஊக்கப்படுத்தப்படுகின்றன. பென்ஷன் தொகைகள் பங்குச் சந்தையில் முதலீடாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பங்குகள் பங்கு வர்த்தகத்தை நிறுத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளன.

பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் முக்கி யமான பங்குதாரர்கள், இயக்குநர் குழும உறுப்பினர்கள் வரும் ஆறுமாதத் துக்கு பங்குகளை விற்க தடைவிதிக் கப்பட்டிருக்கிறது. இந்த தடையை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீன பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையம் எச்சரித்திருக்கிறது.

இதுபோல சில நடவடிக்கைகளால் புதன்கிழமை சரிந்த சந்தை மீண்டும் உயர்ந்தது. ஆனால் எவ்வளவு நாளைக்கு சந்தையை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பது சீன ஆட்சியாளர்கள் கையில்தான் உள்ளது.

மும்பை அனலிஸ்ட் ஒருவரிடம் பேசிய போது பொதுவாக பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டால் உச்சபட்ச நிலையில் இருந்து 50 சதவீதம் வரை சரிய வாய்ப்பு இருக்கிறது. இதுவரை 30 சதவீதம் சரிந்திருக்கிறது. இன்னும் 10 முதல் 20 சதவீதம் வரை சரிவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றார்.

இந்தியாவுக்கு பாதிப்பு என்ன?

சீன பொருளாதாரம் உலகின் 2-வது பெரிய பொருளாதாரமாக இருக்கலாம். ஆனால் இந்திய பங்குச்சந்தை 1990-களில் எப்படி இருந்ததோ அந்த நிலையில் சீனா இருக்கிறது. சிறுமுதலீட்டாளர்களின் பங்கு, விதிமுறைகள் அனைத்திலும் சீனா மாற்றங்கள் கொண்டு வரவேண்டியது ஏராளமாக இருக்கிறது. அதாவது, சீனா சர்வதேச சந்தைகளில் இருந்து விலகியே இருக்கிறது. தற்போது சீன சந்தையில் அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு 2 சதவீதம் மட்டுமே.

2008-ம் ஆண்டு அமெரிக்காவில் சரிவு வந்த போது, அமெரிக்காவில் முதலீடு செய்தவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. அதனால் பல நாடுகளின் பங்குசந்தையில் இருந்து முதலீட்டை எடுத்தார்கள். அப்போது இந்திய பங்குச்சந்தையில் இருந்து முதலீட்டை எடுத்ததால் இங்கேயும் சரிவு ஏற்பட்டது. ஆனால் அந்த நிலைமை இப்போது இல்லை. தற்போதைய சீன பங்குச்சந்தை களின் சரிவு அங்குள்ள முதலீட்டாளர்களுக்கு மட்டுமே இழப்பு என்று பங்குச்சந்தை வல்லுநர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.

சிறுமுதலீட்டாளர்களின் மனநிலை உலகம் முழுவதும் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. எங்கும் எப்போதும் முதல் அடி அவர்களுக்குத்தான் போலும்.

karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x