Published : 16 Sep 2019 11:40 AM
Last Updated : 16 Sep 2019 11:40 AM

எஸ்ஐபி மூலம் செல்வம் சேர்க்கும் சூட்சுமம்

எஸ்ஐபி எனப்படும் முதலீட்டுத் திட்டத்தின் மூலம் ஒரு முதலீட்டாளர் தனது இலக்கை எளிதில் அடைய முடியும். ஆனால், முதலீடு செய்வது தொடர்ச்சியான செயல்பாடாக இருக்க வேண்டும். இது பெரும்பாலான முதலீட்டாளர்களுக்குத் தெரிந்திருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி முதலீட்டில் பலருக்குத் தெரியாத சூட்சுமம் ஒன்று உள்ளது. அது என்னவெனில், சந்தையின் ஏற்ற இறக்கங்களை தொடர்ந்து கவனித்து வந்தால் எஸ்ஐபி மூலம் குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்ட முடியும். அதன் மூலம் முதலீடு செய்யும் போதெல்லாம் அதிக மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளைச் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

ஆனால் சந்தை எதிர்மாறாக இருக்கும்போது எஸ்ஐபியில் தொடர்ந்து முதலீடு செய்யும் மனநிலையை உருவாக்கிக் கொள்வது என்பது சவாலானதுதான். ஆனாலும் எஸ்ஐபி முதலீட்டாளர்கள் இதை உணர்ந்துகொண்டால் தங்களது முதலீட்டில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரலாம். அதாவது சந்தை இறக்கத்தில் இருக்கும் போது, நம்மிடமுள்ள எஸ்ஐபி திட்டத்தில் மேலும் முதலீடு செய்வதன் மூலம் அதிக யூனிட்டுகளைத் திரட்டிக்கொள்ள முடியும்.

ஆனால், சில முதலீட்டாளர்கள் அதிக விலை கொடுத்து சில தவறுகளை செய்வார்கள். தங்களுடைய எஸ்ஐபி முதலீட்டைத் தொடராமல் இருப்பார்கள். சிலர் அதற்கு ஒருபடி மேலாக கையிலிருக்கும் யூனிட்டுகளையும் விற்றுவிடுவார்கள். அதிக விலைக்கு வாங்கி, விலை குறைவாக விற்கும் இந்த தவறை முதலீட்டாளர்கள் செய்கிறார்கள்.

ஒரு நல்ல எஸ்ஐபி முதலீடு என்பது அந்தத் திட்டத்தின் முழு ஏற்ற இறக்க சுழற்சியையும் கவனிப்பது. எஸ்ஐபி திட்டத்தில் இறக்கம் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கிறது என்று பார்க்காமல், அத்தகைய சமயத்தில்தான் நாம் செய்யும் முதலீடு அதிக யூனிட்டுகளைச் சேர்க்க உதவியாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீண்டகால அடிப்படையில் நம்முடைய எஸ்ஐபி முதலீடு சிறப்பான வளர்ச்சியை அடைய இதுவே சிறந்த வழி.

பங்குச் சந்தை வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் அனைத்துவிதமான இறக்கங்களிலிருந்தும் சந்தை மீண்டு வந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். எஸ்ஐபி திட்டத்தில் தொடர்ச்சியாக முதலீடு செய்யும்போது சந்தை விழுந்தாலும் முதலீடு செய்து அதிக யூனிட்டுகளை வாங்கி ஆதாயம் அடையலாம். சந்தை கரடியின் பிடியில் இருக்கும்போது முதலீட்டு முடிவுகளை எடுப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயமில்லை. ஆனால், துணிந்து முதலீடு செய்தால் அதிக லாபத்தை அடைய முடியும்.

எஸ்ஐபி திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் நம்முடைய முதலீடு ஒரே தொகைதான். ஆனால், சந்தை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப நமக்கு கிடைக்கும் யூனிட்டுகளின் எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கும். சந்தை இறங்கும்போது அதிக யூனிட்டுகளும், சந்தை ஏறும்போது குறைவான யூனிட்டுகளும் கிடைக்கும். அதாவது சந்தை விழும்போது நீங்கள் அதிக பங்குகள், அதிக யூனிட்டுகளை வாங்குவீர்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் மாதாந்திர எஸ்ஐபி உடன் சில கூடுதல் திட்டங்களையும் இணைத்து வழங்குகின்றனர். எஸ்ஐபி டாப்-அப், எஸ்ஐபி பாஸ், எஸ்ஐபி லைஃப் கவர் ஆகியவை அவற்றில் சில.

செல்வத்தை சேர்க்கும் வழிகளில் எஸ்ஐபி சிறப்பானதாக எப்போதும் உள்ளது. முதலீட்டாளர்களின் தேவைக்கு ஏற்ப, மியூச்சுவல் ஃபண்ட் துறை தன்னை தொடர்ந்து தகவமைத்துக் கொண்டு முதலீட்டாளர்களுக்கு சிறப்பான முதலீட்டு அனுபவத்தை வழங்கிவருகிறது. எனவே சந்தை இறங்குவதை வாய்ப்பாகப் பார்க்காமல் எஸ்ஐபி யூனிட்டுகளை விற்பது என்பது செல்வம் சேர்க்கும் பாதையை நாமே அடைப்பது போலாகும். அதற்கு மாறாக, உங்களுடைய எஸ்ஐபி தொகையை அதிகரித்து, பொறுமையாக காத்திருந்தால் ஏற்றத்தின்போது நல்ல பலனை பெற முடியும். அப்போது முதலீட்டு விஷயத்தில் காலம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்வீர்கள்.

எஸ்ஐபி திட்டத்தில் சந்தை ஏற்ற இறக்கங்களைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் தொடர்ந்து முதலீடு செய்துவருவதன் மூலமே நீண்டகால நமது இலக்குகளை அடைய முடியும்.

- ஆர்.கண்ணன்
rkannan@mfspl.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x