Published : 25 May 2015 01:25 PM
Last Updated : 25 May 2015 01:25 PM

மகிழ்ச்சி தரும் மறு விற்பனை

என்னது செகண்ட் சேல்சா? வேண்டவே வேண்டாம். விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் புதுசாவே வாங்கிடலாம் என்பதுதான் ஒருகாலத்தில் மக்களின் மனநிலையாக இருந்தது. வீடு, கார் போன்ற நீண்ட காலம் உழைக்கக்கூடிய பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அதிக தொகைக்கு கைமாறிக் கொண் டிருந்தாலும், இதர வீட்டு உபயோகப் பொருட்களை இரண்டாவது விற்பனையில் சகஜமாக வாங்க மாட்டார்கள். ஒதுக்கி புறந்தள்ளி னார்கள்.

ஆனால் இன்று மறு விற்பனை என்பது தவிர்க்க முடியாத வர்த்தகமாக வளர்ந்து நிற்கிறது. வாங்குபவர்களுக்கு மட்டுமல்ல, உபயோகப்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதற்கும் நல்ல வாய்ப்புகளை வழங்குகிறது செகண்ட் ஹேண்ட் சேல்ஸ் என்கிற மறு விற்பனை சந்தை.

இணையதளங்கள் வருகைக்கு பிறகுதான் மறு விற்பனை சந்தை மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. பயன் படுத்திய பொருட்களை எப்படி விற்பது என்கிற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு இணையதளங்கள் கை கொடுத்தன. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் கார், வீடு என அனைத்தும் இந்த மறு விற்பனையில் கிடைக்கிறது. தேவைக்கு ஏற்ப அலசி ஆராய்ந்து, வாங்கும்போதே பார்த்து வாங்கினால் லாபம்தான் என்கின்றனர் பயனடைந்தவர்கள்.

மறு விற்பனை என்கிற செகண்ட் ஹேண்ட் விற்பனையை பொறுத்தவரை நேரடியாக வாங்குவது, ஏலத்தில் வாங்குவது மற்றும் இணையதளம் என மூன்று வகையான வாய்ப்புகள் உள்ளன.

ஆன்லைன்

பொருட்களின் புகைப்படங்களை பார்த்து தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இணையதளங்கள் வழங்குகின்றன. விலை நமது எதிர்பார்ப்புக்குள் இருக் கிறது என்றால் அந்த பொருளை விற்பவரோடு பேசி வாங்கி விடலாம். திருப்திகரமான விலை அல்லது பொருள் குறித்த உண்மை செய்திகள் இல்லை என்றால் வாங்கத் தேவையில்லை. இதில் நேரடியாக பொருளின் உரிமையாளர் களோடு தொடர்பு ஏற்படுவதால் கூடுதல் நம்பகத்தன்மை இருக்கிறது.

சிலர் அவசரமாக பொருளை விற்பனை செய்வார்கள். அதுபோன்ற நேரங்களில் உடனே விற்க வேண்டும் என்பதற்காக விலையை குறைத்து சொல்வர். இணையதளம் வழி பொருள்களைத் தேடுவதில் இது சாதகமான விஷயம். அதே சமயத்தில் கவனமாகவும் இருக்க வேண்டும். வீடு காலி செய்து வெளியூர் செல்பவர்கள் பொருட்களை விற்பார்கள். அந்த சமயத்தில் விலை குறைவாக இருக்கும். அவசரப்பட்டு வாங்கக்கூடாது. பொருட்களில் ஏதேனும் பிரச்சினை என்றால், அந்த உரிமையாளரை திரும்ப தேடிக் கொண்டிருக்க முடியாது. பரிசோதித்த பிறகே வாங்க வேண்டும்.

ஏலம்

பொருளை விற்பனை செய்பவ ருக்கும் வாங்குபவருக்குமான பாலமாக செயல்படுகிறார் ஏலதாரர். பொருளை வாங்கி விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் பொருளின் உரிமை யாளருக்கு சாதகமான விலை கிடைக்கவே விரும்புவார். சாதகமான விலை கிடைக்கும் பட்சத்தில் வாங்கு பவருக்கும் லாபமே. சில வங்கிகள் பொது ஏலத்தில் தங்களிடம் உள்ள சொத்துகளை ஏலத்துக்கு கொண்டுவரும். நாமே நேரடியாக பங்குபெற்றால் ஏலமுறையிலும் லாபம் பார்க்கலாம்.

நேரடி விற்பனை

மறு விற்பனைக்கு என்றே தனியாக வியாபாரிகள் இருக்கிறார்கள். விற்பனை செய்ய எண்ணம் கொண்டவர் களிடமிருந்து பொருட்களை வாங்கி வைத்திருப்பார்கள். இவர்களிடம் நமது தேவைக்கு ஏற்ப பார்த்து, சோதனை செய்து வாங்கிக் கொள்ளலாம். மறு விற்பனையை பொறுத்தவரை முன்ன ணியில் இருப்பது எலெக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் பயன்படுத்திய கார்கள் மற்றும் மர பர்னிச்சர்கள்தான் என்கிறார்கள் விற்பனையாளர்கள்

கார்கள்

இந்தியாவில் ஆண்டுக்கு 25 லட்சம் பயன்படுத்திய கார்கள் விற்பனை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2011ம் ஆண்டில் 17 லட்சமாக இருந்த பயன்படுத்திய கார்களின் விற்பனை 2014ம் ஆண்டில் 25 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 2020ம் ஆண்டில் 40 லட்சம் கார்களாக அதிகரிக்கும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகிறது. பயன்படுத்திய கார்களைப் பொறுத்த வரை, பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களே மறுவிற்பனையில் அதிகம் விற்பனையாகின்றன.

வீடு

புது வீடு வாங்கும் விலையிலிருந்து அதிகபட்சம் 40 சதவீதம் வரை விலை குறைவாக பழைய வீட்டை வாங்கிவிடலாம். பழைய வீட்டை வாங்கப் போகிறோம் என்றால் அந்த வீட்டின் சொத்து மதிப்பை ஆராய வேண்டும் அப்போதுதான் அதற்கு சரியான விலை கொடுத்திருக்கிறோமா என்பது தெரியும்.

5 ஆண்டுகள் பழைய வீடு என்றால் புதுவீடு வாங்கும் விலையிலிருந்து 20 சதவீதம் வரை விலை குறைவாகக் கேட்கலாம். 10-15 ஆண்டுகள் பழைய வீடு என்றால் 25-30 சதவீதம் விலை குறைக்கலாம். அதாவது அந்த ஏரியாவில் புது வீடு விற்கும் விலையிலிருந்து இவ்வளவு குறைத்துக் கொண்டு விலை பேசலாம். இதனடிப்படையில்தான் வங்கிக் கடன் கிடைக்கும்.

எலெக்ட்ரானிக் பொருட்கள்

செல்போன் முதல் எல்இடி வரை அனைத்து எலெக்ட்ரானிக் பொருட் களும் செகண்ட் ஹேண்ட் விற்பனையில் கிடைக்கிறதுதான். ஒரு டிவி வாங்கு கிறோம் என்றால் எதற்காக விற்கிறார்? எத்தனை ஆண்டுகள் பழமையானது, அந்த மாடல் தற்போது விற்பனையில் உள்ளதா, சர்வீஸ் கிடைக்குமா என்கிற விவரங்களை பார்க்க வேண்டும்.

அவசரமாக விற்பனை செய்கிறார்கள் என்பதற்காக வாங்குபவர்களும் அவசரம் காட்ட வேண்டும் என்பதில்லை. நமக்கு திருப்திவரும் வரை சோதித்துதான் வாங்க வேண்டும். புதிதாக வாங்குவதை விடவும், அதே தரத்திலான பயன்படுத்திய பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கலாம் என்பது வளர்ந்து வரும் மனநிலை. அதுபோலவே மறு விற்பனை செய்து பணம் பண்ணலாம் என்கிற கருத்தும் வளர்ந்து வருகிறது. இதில் விற்பவரும் வாங்குபவரும் பயனடைவது அவரவர் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

maheswaran.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x