Last Updated : 13 Apr, 2015 11:00 AM

 

Published : 13 Apr 2015 11:00 AM
Last Updated : 13 Apr 2015 11:00 AM

பி.எப். பணத்தை சந்தையில் முதலீடு செய்யலாமா?

வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா? நீண்ட காலமாக முடிவெடுக்க முடியாமல் இருக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று. ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அவரது தலைமையிலான நிதி அமைச்சகம் இதற்கு ஒப்புதல் கொடுத்தது. பி.எப். தொகையில் 15 சதவீதம் வரை பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்றும், இதில் 5 சதவீதத் தொகையை நேரடியாக பங்குச் சந்தையிலும் 10 சதவீத தொகையை மியூச்சுவல் பண்ட் மூலமாகவும் முதலீடு செய்ய அப்போதைய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது.

ஆனால், அப்போதைய தொழில் சங்கங்களின் நிர்பந்தம் காரணமாக தொழிலாளர் அமைச்சகம் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இந்த நிலைமையில் கடந்த பட்ஜெட் உரையின் போது, ஐந்து சதவீதத் தொகையை பங்குச்சந்தை அல்லது அது சார்ந்த முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்று அருண் ஜேட்லி அறிவித்தார். நரேந்திர மோடியின் கீழ் செயல்படும் தொழிலாளார் துறை அமைச்சகம் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.

பி.எப். தொகையினை இ.டி.எப்களில் முதலீடு செய்யப்படும் என்று தொழிலாளர் துறை செயலாளர் சங்கர் அகர்வால் தெரிவித்தார். மேலும் நீண்ட காலத்தில் முதலீடு செய்யும் போது பி.எப். கணக்கு வைத்திருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இதற்கான முதலீட்டு திட்டம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

தொழில் சங்கங்கள் இந்த முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும், தொழி லாளர் அமைச்சகம் இதற்கு ஒப்புதல் வழங்கியது. இதற்கு காரணம், பி.எப். பணம் ஓய்வு காலத்தில் கிடைக்க கூடியது. அதாவது இந்த தொகை நீண்ட காலம் முதலீடு செய்யப்படும் என்பதால், பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்தால் அது பொருளாதாரத்துக்கும், பி.எப். சந்தாதாரருக்கும் நல்லது சாதகமானது என்று சொல்லப்படுகிறது.

வெளிநாடுகளில் ஓய்வூதியத் தொகையில் கணிசமான அளவு அந்த நாட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் 40 சதவீதத்துக்கு மேலான ஓய்வூதியத் தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.

வரும் 2016-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் 5 சதவீத ஓய்வூதியத் தொகை பங்குச்சந்தை சார்ந்த இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் என்று மத்திய பி.எப் ஆணையர் ஜலான் தெரிவித்திருக்கிறார்.

இப்போதைக்கு இரண்டு விதமான பரிந்துரைகள் இருக்கிறது. மொத்தம் இருக்கும் பி.எப். தொகையில் 1 சதவீத தொகை முதலீடு செய்யலாம். அதாவது 8.25 லட்சம் கோடி அளவுக்கு பி.எப். தொகையில் 8250 கோடி ரூபாயை பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். அல்லது ஒவ்வொரு வருடமும் உயர்ந்து வரும் பி.எப். தொகையில் 5 சதவீதத்தை பங்குச்சந்தை முதலீடு செய்யலாம் என்ற இரண்டு பரிந்துரைகள் இருக்கின்றன.

முதலில் ஒரு சதவீதத்தை முதலீடு செய்து அதன் பிறகு கிடைக்கும் லாபத்தை மறு பரிசீலனை செய்து ஐந்து சதவீதமாக உயர்த்தலாம் என்று மத்திய ஓய்வூதிய ஆணையர் கே.கே. ஜலான் தெரிவித்திருக்கிறார். இந்த தொகை முக்கிய குறியீடுகளாக சென்செக்ஸ், நிப்டி ஆகிய இண்டெக்ஸ் இ.டி.எப்.களில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில் பங்கு விலக்கல் துறை செயலாளர் ஆராதனா ஜோஹ்ரி, கணிசமான பி.எப். தொகையினை பொதுத்துறை இ.டி.எப்.களில் (சி.பி.எப்.சி. இடிஎப்) முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இந்த குறியீடு கடந்த வருடம் உருவாக்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி., கெயில் இந்தியா, கோல் இந்தியா, இந்தியன் ஆயில் உள்ளிட்ட 10 நிறுவனங்கள் இந்த இ.டி.எப்.களில் உள்ளன.

பி.எப். தொகை எப்போது முதலீடு செய்யப்படும் என்பதற்கு முன்பே, பங்கு விலக்கு துறை தன்னுடைய விருப்பத்தை தெரிவித்திருக்கிறது.

ஏன் வேண்டாம்?

இந்த நிலையில் பி.எப். தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு தொழில் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது சரியானது அல்ல. பங்குச்சந்தை சரியும் பட்சத்தில் இந்த சரிவுக்கு யார் பொறுப்பேற்பார்கள். இவ்வளவு ரிஸ்க் எடுத்து ஏன் முதலீடு செய்யவேண்டும். முதலீட்டுக்கு அரசாங்கம் உத்தரவாதம் கொடுக்குமா என்று தொழிற்சங்கங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன. மேலும் பங்குச்சந்தையின் ஏற்றத்துக்காக சாதாரண நபர்களின் தொகையை முதலீடு செய்கிறார்கள் என்ற விமர்சனமும் இருக்கிறது.

ஏன் தேவை?

பி.எப் தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வது நல்லது. இதனால் முதலீட்டாளர்களுக்கு கொஞ்சம் அதிக லாபம் கிடைக்கும். மேலும் சிறிய தொகை மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது, அதுவும் இண்டெக்ஸ் சார்ந்த இ.டி.எப்-களில் முதலீடு செய்யப்படுவதால் அச்சப்படுவதற்கு ஏதும் இல்லை. இந்த முடிவினை பல வருடங்கள் கால தாமதமாக எடுத்திருக்கிறோம். வளர்ந்த நாடுகள் எப்போதோ எடுத்துவிட்டார்கள் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.

பொருளாதார நிபுணர் ஒருவரிடம் பேசும் போது இப்போதைக்கு 8.75 சதவீத வட்டி கிடைக்கிறது. 12 சதவீதத்திலிருந்து குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு கீழேயும் இந்த வட்டி குறைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதம் இல்லை. மேலும் மக்களுக்கு தெரிவது 8.75 சதவீதம் மட்டும்தான். ஆனால் சமயங்களில் உண்மையான வட்டி விகிதம் ( பணவீக்கத்துக்கும் கிடைக்கும் வட்டிக்கும் இடையே உள்ள விகிதம்) என்று பார்த்தால் மிகவும் குறைவுதான். சமயங்களில் கிடைக்கும் வட்டியை விட பணவீக்கம் அதிகமாக இருக்கும்போது அதனை யாரும் கண்டுகொள்வதில்லை என்றார்.

பயன் தராது

முதலீடு தேவை, தேவை இல்லை என்று சொல்பவர்களை போல இந்த, பங்குச்சந்தையில் சிறிதளவு பி.எப். முதலீடு செய்வது பெரிய பயன் தராது என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். 50 வயதுகளுக்கு மேல் இருப்பவர்கள், இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற்றுவிடுவார்கள்.

அதனால் இது சாதகம், இல்லை என்று சொல்வதை விட குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு பயனில்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

தவிர ஐந்து சதவீத தொகை என்பது மிகவும் குறைவு, ரூ.3,600 பி.எப். பிடிக்கப்படுகிறது என்றால் மாதம் 180 ரூபாய் மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும் என்பதால் பங்குச்சந்தை முதலீட்டை ஆதரிக்கும் நபர்களில் இதில் பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள். இந்த முடிவு சரியா, தவறா என்பது சில வருடங்களுக்கு பிறகே தெரியவரும்.

வாசு கார்த்தி
karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x