Last Updated : 20 Apr, 2015 10:41 AM

 

Published : 20 Apr 2015 10:41 AM
Last Updated : 20 Apr 2015 10:41 AM

குறள் இனிது: மக்களின் மன்னன்!

சென்ற ஆண்டின் சிறந்த வர்த்தக நிறுவனத்தையோ, நிறுவனத் தலைவரையோ தேர்ந்தெடுக்க அளவுகோல் என்ன? அந்த வருடத்தின் வளர்ச்சியைக் கொண்டே முடிவு செய்ய லாமா? அவ்வாறு தேர்வு செய்யப்படும் நிறுவனங்களின் பணியாளர்களும் வாடிக் கையாளர்களும் அந்நிறுவனங்களை அவ்வாறே சிறப்பானவையாக ஏற்பார்களா என்ன?

சமீபத்தில் வெளியான சமூக வளர்ச்சிக் குறியீட்டு எண்களின் (எஸ்பிஐ) விவரத்தின்படி, உலகில் பொருளா தாரத்திலும் படைபலத்திலும் பெரும் வல்லரசாகத் திகழும் அமெரிக்காவிற்கு அதில் முதலிடம் இல்லை! அதன் நிலை 16 தான்!! 133 நாடுகளின் அட்டவணையில் இந்தியாவின் இடம் 101!

முதலிரண்டு இடங்களில் நார்வே, ஸ்வீடன் உள்ளன. ஏனெனில், இதில் மக்களின் வாழ்க்கைத் தரம், சுகாதாரம், தனிமனித பாதுகாப்பு போன்றவற்றிற்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கொடை, கருணை, நீதி தவறாத ஆட்சி, நலிந்தோர்க்கு உதவுதல் ஆகிய நான்கு குணங்களைக் கொண்ட அரசனே மன்னருள் ஒளிவிளக்கு என்கிறது திருக்குறள்!

தர்மம் செய்தல்

இக்கால வர்த்தக நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்! உன்னதத் தலைவர்கள் பணியாளருக்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் வாரி வழங்குவார்கள். விப்ரோவின் அசிம்பிரேம்ஜி தானமாகக் கொடுத்தது ரூ.8,000 கோடி என்றும், ஹெச்சிஎல்லின் ஷிவ் நாடார் கொடுத்தது ரூ.3,000 கோடியென்றும் படித்து இருப்பீர்கள்!

தமக்குள்ள சமூக அக்கறையை வெளிப்படுத்தும் விதத்தில் டாடா ஸ்டீல் வெளியிட்ட “நாங்கள் இரும்பு தயாரிக்கவும் செய்கிறோம்” (We also make Steel) என்கிற விளம்பரத்தை மறந்து இருக்க மாட்டீர்கள்!

நீதியும் கருணையும்

நிதிமோசடி செய்த ஒருவரை அவரது நிறுவனம் வேலையிலிருந்து நீக்கியிருந்தது. அவர் மூன்று வருடங்களில் இறந்து விட்டார். அவரது குடும்பத்திற்கு உதவி அளிக்க விதிகள் இல்லாதிருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் இரக்கம் காட்டுவது தானே பண்பு. காரணமும் கட்டாயமும் இன்றி உதவுவது தானே கருணை?

நலிந்தோர்க்கு உதவி

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி! தலைவனுக்கு அடையாளம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வேண்டுவன செய்வது தான். நல்ல தலைவர்கள் சமூக அக்கறையுடன் நிறுவனம் செல்லும் திசையையே மாற்றி விடுவார்கள்.

தற்காலத்தின் மிகச் சிறந்த 10 நிறுவனத் தலைவர்களை பட்டியலிடுகிறார் டேவிட் வில்லியம்ஸ். அவரது தரவரிசையில் பெப்ஸிகோவின் இந்திரா நூயி இடம்பெறக் காரணம், அவர் அந்நிறுவனத்தைத் துரித உணவுகளிலிருந்து ஆரோக்கிய உணவுகளுக்கே கொண்டு செல்வதுதான் என்பார்! இது நடப்பது அவசியம், அவசரம்!!

மயக்கமூட்டும் எண்களிலிருந்து மீள்வோம்!! மனிதநேயம் போற்றுவோம்!! நல்வழி காட்டும் தீந்தமிழ்க் குறள் இதோ.

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்

உடையானாம் வேந்தர்க் கொளி

somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x