Published : 06 Feb 2017 11:51 AM
Last Updated : 06 Feb 2017 11:51 AM

ஜேட்லி பயணம் எப்படி? இரட்டை குதிரை சவாரி

பணமதிப்பு நீக்கத்திற்கும், ஜி.எஸ்.டி நடைமுறைக்கும் இடையே ரயில்வே பட்ஜெட் இணைப்பு, முன் தள்ளப்பட்ட பட்ஜெட் தேதி ஆகிய பின்னணிகளுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இது. பணமதிப்பு நீக்கத்தால் பொருளாதார வளர்ச்சியில் தொய்வு ஏற்படும் என்று சிலர் ஆருடம் சொல்லி யிருந்த நிலையில் பொது மக்கள் சலுகைகளை எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த முறை மத்திய பட்ஜெட் உடன் ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்து தாக்கல் செய்யப்பட்டதால் வரி சம்பந்தப்பட்ட முக்கிய அறிவிப்புகள் நிதியமைச்சரின் பேச்சில் இடம் பெறவில்லை. ஆனால் வரி மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்திலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக ரொக்கத்தை அறவே தவிர்க்கும் வகையில் உள்ளது. வரி ஏய்ப்பு குறித்து நிதியமைச்சர் வெளிப்படையாக சில புள்ளிவிவரங் ளையும் தகவல்களையும் வெளியிட்டது வித்தியாசமான ஒன்று. வரிதொடர்பாக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில முக்கியமானவை இதோ.

தனி நபர்

ரூபாய் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர் களுக்கு வருமான வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மற்ற வருமான வரி உச்ச வரம்பிலோ, வரிவிகிதத்திலோ எவ்வித மாற்றம் இல்லை. ஆனால் ரூ.50 லட்சத்திற்கு மேல் ரூ.1 கோடிக் குள் வருமானம் உள்ளவர்களுக்கு 10% சர்சார்ஜ். ரூ.1 கோடிக்கு மேல் உள்ளவருக்கு 15% சர்சார்ஜ் என்பது அதிக வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும். மேலும் 5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் ஒரு பக்க வருமான வரி படிவம் சமர்ப்பித்தால் போதுமானது.

கம்பெனி வரி

ஆண்டு ரூ.50 கோடிக்கு மிகாமல் விற்றுமுதல் (Turn Over) ஈட்டும் கம்பெனிகளுக்கு வருமான வரி 30% லிருந்து 25% ஆக குறைக்கப்பட்டது, தொழில் அமைப்புகளுக்கு ஊக்கம் கொடுக்கும். ஆனால் பெரும்பாலான சிறு மற்றும் குறுந்தொழில் அமைப்பு கள், தனிநபர் மற்றும் பங்குதாரர் அமைப்பில்தான் உள்ளனர். இவர் களுக்கான வருமான வரி 30 சதவீத மாகத்தான் உள்ளது. இவர்கள் தங்க ளது நிறுவனங்களை கம்பெனியாக மாற்றுவதற்கு வரி குறைப்பு ஊக்கு விக்கும் என்று நிதியமைச்சர் கூறினாலும், கம்பெனி அமைப்பில், தனியாரிடம் கடன் வாங்குவது, கொடுப்பது போன்ற பல சட்டதிட்டங்களில் நடைமுறை சிரமங்கள் இருப்பது சிறு தொழில் அமைப்பினருக்கு ஏற்றதாக இருக்காது. இந்தியாவில் 50 கோடி வரை விற்பனை செய்யும் தொழில் அமைப்புகளில் 90% தனிநபர் கூட்டுநிறுவனங்கள் போன்ற அமைப்புகள் ஆகும்.

ஸ்டார்ட்-அப் எனப்படும் புதிய நிறுவனங்களுக்கு, அந்நிறுவனங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து முதல் 5 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு வருமான வரிச் சலுகை இருந்தது. தற்போது முதல் 7 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு வருமான வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

ரொக்கமில்லா பரிவர்த்தனை

கறுப்புப்பண ஒழிப்புக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்துவரும் அரசு சில நல்ல வரி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. தற்போது ரூ.20,000க்கு மேல் ரொக்கமாக செலவு செய்வது வருமான வரிச் சட்டத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. இதனை 10,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்க பரி வர்த்தனை முற்றிலும் தடை செய்யப் பட்டுள்ளது. இதை மீறும் பட்சத்தில் இதற்கு ஈடான தொகை அபராதமாக விதிக்கப்படும். இது ஒரே நாளிலோ அல் லது பல நாட்களிலோ கொடுக்கப்படும் மொத்த தொகைக்கும் பொருந்தும்.

வாடகையாக மாதம் ரூ.50,000 மேல் செலுத்துபவர்கள் இனி 5% டிடிஎஸ் பிடித்தம் செய்ய வேண் டும். இதனால் வருமான வரி பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கும், வாடகைக்கு இருக்கும் மூத்த குடிமக்களுக்கும் வரிப் பிடித்தம் பற்றி அரசாங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

ரூ. 2 கோடி வரை விற்றுமுதல் உள்ள கம்பெனிகள் உத்தேச வருமானமாக விற்பனையில் 8 சதவீதமாக கணக்கிட்டு அதற்கு வரி செலுத்தலாம் என்கிற நிலை தற்போது உள்ளது. இந்த விற்பனை டிஜிட்டல் முறையிலோ வங்கி கணக்கு மூலமாகவோ செய்யும் பட்சத்தில் 6% மட்டும் உத்தேச வருமானமாக காண் பித்து வரி செலுத்திக் கொள்ளலாம்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை யாக ஒருவர் ரொக்கமாக அதிக பட்சம் ரூ 2,000 மட்டுமே வழங்கலாம் என்கிற அறிவிப்பு நல்ல ஆரம்பம். இதையே ரொக்கமாக அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுப்பது முழுமையாக தடை செய்யப்பட்டிருந்தால் பல பெயரில் பணம் பெறுவதைத் தடுத்திருக்கும். ஏற்கனவே பொது மக்களிடையே அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சிகளையோ வருமான வரி இலாகா கறுப்புப்பணம் குறித்து ஒன்றும் செய்வதில்லை என்கிற பரவலான கருத்து உள்ளது.

இத்தகைய புதிய வரம்பு வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த உதவிகரமாக இருக்கும். கடன் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கலாம் என்று கூறப் பட்டிருக்கிறது. ஆனால் மற்ற வர்கள் பெயரில் வாங்கி கறுப்பு பணத்தை வெள்ளை யாக்குவதற்கு வழி வகைகள் இல்லாதவாறு விதிமுறை களை உருவாக்க வேண்டும். அதே சமயம் ரிசர்வ் வங்கி பத்தி ரங்கள் மூலம் நடைபெறுவதால் நன்கொடையாக வழங்கப்படும் பணம் கணக்கில் வரும்.

ஏய்ப்பு நடந்து கொண்டிருந் தாலும் அதற்கான காரணம் என்ன என்பதையும் ஆராய வேண்டும். அரசு செய்ய வேண்டிய கடமைகளில் குறை இருக்கும் போது வரிதாரர் வரிசெலுத்து வதற்கான ஊக்கம் குறைந்து வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். வரி அதிகம் உள்ள பல நாடுகளில் சமூக பாதுகாப்பு திட்டம் (Social Security Scheme) சீராக செயல்பட்டு அரசாங்கம் பொது மக்களது முக்கியத் தேவைகளான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, முதியோர் பாதுகாப்பு ஆகியவற்றை பார்த்து கொள்ளும் போது வருமான வரி கட்ட மக்கள் தயக்கம் காண்பிப்பதில்லை.

காத்திருக்கும் சவால்கள்

ரொக்கமில்லா பரிவர்த்தனைகள் மூலம் கறுப்புப்பணம், லஞ்சம் ஆகிய வற்றை நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். அரசின் இந்த குறிக்கோளுக்கு கொடுக் கப்படும் முக்கியத்துவத்தை சட்டமாற் றங்களும் நடைமுறைகளும் பறைசாற்று கின்றன. ஆனால் வங்கி கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கான சேவைக்கட்டணம் அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

பிம் (BHIM) போன்ற செலவில்லா செயலிகள் நிச்சயம் வரவேற்கத்தக்கது. இது போன்ற பல வகை செயலிகள் கண்டுபிடிக்கப்பட்டு உபயோகிப்பாளர் களுக்கு எந்த விதமான சேவைக் கட்டணம் இல்லாமல் கொண்டுவரும் போது தான் டிஜிட்டல் இந்தியா திட்டம் முழுமையடையும். மேலும் கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த் தனைகள் பாதுகாப்பாக இருக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் பட்சத்தில் உபயோகிப்பாளருக்கு நம்பிக்கை ஏற்படும்.

ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக கையடக்க மின்னணு கருவிகள் மீதான அனைத்து வரிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி இன்னும் சில மாதங்களில் வர இருப்பதால் மறைமுக வரி குறித்து இந்த பட்ஜெட்டில் அதிக மாற்றமில்லை.

மத்திய அரசு இந்த பட்ஜெட்டில் தேசிய ஊரக வளர்ச்சி, கட்டமைப்பு மற்றும் விவசாயத்திற்கு கணிசமான ஒதுக்கீடு செய்திருப்பது, பொருளாதாரத்தை ஊக்கு விக்கும். வேலை வாய்ப்புகள் அதிகம் ஏற்படுத்தும். தொழில் வளர்ச்சிக்கு வித்தாகும்.

இந்த பட்ஜெட் மூலம் செய்யப்பட்ட ஒதுக்கீடுகள் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தி இந்தியாவை பிரகாசமான திசைக்கு எடுத்துச் செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் ஒவ்வொரு திட்டமும் மத்திய அரசோ மாநில அரசோ செயல்படுத்தி முடிக்கும் முன் சில குறுக்கீடுகள் வருகின்றன. இவற்றை சரி செய்ய எந்த விதமான திட்டங்களும் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை. ரயில்வே பட்ஜெட், பொதுபட்ஜெட் என்ற இரட்டை குதிரை சவாரியில் ஜேட்லி பயணம் எப்படி இருக்குமோ?

- ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
karthikeyan.auditor@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x