Last Updated : 22 Oct, 2018 11:10 AM

 

Published : 22 Oct 2018 11:10 AM
Last Updated : 22 Oct 2018 11:10 AM

ரூ. 70 ஆயிரம் கோடி மோசடிக்கு யார் பொறுப்பு?

மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நிகழ்ந்த  மோசடியால் ஏற்பட்ட நஷ்டம் 70 ஆயிரம் கோடி ரூபாய். இது தவிர, விஜய் மல்லையா போன்றவர்கள் வங்கிகளில் கடனைப் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடியதால் வங்கிகளில் அதிகரித்த வாராக்கடன் ரூ. 10.25 லட்சம் கோடி.

கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடிகள் வங்கிகளில் அரங்கேறியுள்ளன. மோசடிகளின் எண்ணிக்கை மட்டுமே 6,500. இதில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி கூட்டணி நிகழ்த்திய மோசடி ரூ. 12 ஆயிரம் கோடி.

பெரிய தொகை சம்பந்தப்பட்ட மோசடிகள் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்தன. வங்கிகளின் ஸ்திரத் தன்மையை சீர்குலையச் செய்யும் மோசடிகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் வங்கிகளின் எதிர்காலம் கேள்விக்குறிதான் என எச்சரிக்கிறது ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி). பொதுவாக ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் சிவிசி இம்முறை வங்கிகளில் நிகழ்ந்த 100 மோசடி சம்பவங்களை ஆராய்ந்தது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவிசி அறிக்கை பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகளை படம் பிடித்துக் காட்டியுள்ளது. வங்கிகளில் இப்படியெல்லாமா மோசடிகள் நிகழ்ந்துள்ளன என்று வியப்பிலாழ்த்தும் வகையிலான மோசடிகளை பதிவு செய்துள்ளது டி.எம். பாசின் தலைமையிலான சிவிசி.

ஜூவல்லரி, உற்பத்தி, வேளாண்துறை, ஊடகம், விமான போக்குவரத்து, சேவைத் துறை, 13 துறைகளில் மோசடி எப்படி நிகழ்ந்துள்ளது என்பதை ஆராய்ந்துள்ளது. எந்தெந்த வங்கிக் கணக்குகளில் மோசடி நிகழ்ந்துள்ளன, கடன் பெற்று மோசடி செய்த நபர், அவர் சார்ந்த நிறுவனம் உள்ளிட்ட விவரங்களை பாசின் குழு வெளியிட்டுள்ளது.

அதேசமயம் இத்தகைய மோசடிகளை நிகழ்த்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இதில் வங்கி அதிகாரிகளின் பங்கு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.

 ஜூவல்லரி துறையினர் வங்கிகளை எவ்விதம் ஏமாற்றுவர் என்பதற்கு நீரவ் மோடி, மெகுல் சோக்சி உதாரணம் என்றாலும், அது தவிர இத்துறையினர் இறக்குமதி செய்யப்படும் வைரங்களின் மதிப்பை மிக அதிகமாக காண்பித்து கடன் பெற்றுள்ளனர்.

ஏற்றுமதி ஆர்டர்களைக் காண்பித்து கடன் பெற்றுள்ளனர். ஆனால் ஏற்றுமதி செய்யும்போது உண்மையில் அவர்கள் கடன் பெற்ற அளவுக்குக் கூட ஏற்றுமதி இருக்காது. இது தவிர, ஒரு வங்கியில் கடன் பெறுவது பிறகு வைர ஏற்றுமதி செய்வோரிடம் மற்றொரு போலி ரசீது பெற்று அதற்கு கடன் பெறுவது என நூதன முறைகளைக் கையாண்டு ஏமாற்றியுள்ளனர். நிறுவனங்களும் ஆவணங்களில் பெருமளவு தில்லுமுல்லு செய்து வங்கிகளை ஏமாற்றியுள்ளன.

இதேபோல உற்பத்தித் துறையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தனது ஆண்டு நிதி அறிக்கையை தவறாக தயாரித்துள்ளது. ரூ. 23.74 கோடி லாபம் ஈட்டியது போன்று அறிக்கை தயாரித்து கடன் பெற்றுள்ளது. பின்னர் அந்நிறுவனம் உண்மையான நிதி அறிக்கையை தாக்கல் செய்தபோது நிறுவனத்தின் லாபம் வெறும் ரூ. 34 லட்சம் மட்டுமே என்பது தெரியவந்துள்ளது. அடுத்த நிதி ஆண்டில் இந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

ஆனால் முந்தைய ஆண்டு தாக்கல் செய்த நிதி அறிக்கையையே அந்நிறுவனம் வங்கிக்கு தொடர்ந்து தாக்கல் செய்து ஏமாற்றியது பின்னர் தெரியவந்துள்ளது.

அடுத்தது நிரந்தர சேமிப்புக் கணக்கு மோசடி. பொதுவாக இத்தகைய மோசடி பேர்வழி நிறுவனங்களில் தன்னை வங்கி பிரதிநிதி என்றும், வங்கியில் தான் நிறுவனங்களின் நிதி ஆலோசகர் என்று கூறி மோசடியை நிகழ்த்தியுள்ளார். இந்த மோசடியில் மட்டும் 7 மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

வங்கிக்கு தம்மால் அதிக டெபாசிட் திரட்டித்தர முடியும் என்றும், நிறுவனங்களிடம் தம்மால் வங்கியில் கடன் பெற்றுத் தர முடியும் என்று கூறி மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த வகையில் ரூ. 604.33 கோடி அளவுக்கு மோசடி நிகழ்த்தப்பட்டுள்ளது.

வங்கிகள் ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கும் உறுதியளிப்பு கடிதத்தை மட்டுமே வைத்து ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தது நீரவ் மோடி கோஷ்டி. இதன் பிறகுதான் ரிசர்வ் வங்கி இத்தகைய உறுதியளிப்பு கடிதம் அளிப்பதை ரத்து செய்துள்ளது என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

வங்கிகளில் மோசடி நிகழ்வதில் வங்கியாளர்களுக்கு எந்த அளவுக்கு பொறுப்பு உள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ள சிவிசி, இத்தகைய மோசடிகளில் ஆடிட்டர்கள், வழக்கறிஞர்களுக்கும் பொறுப்புள்ளது. எனவே அவர்களையும் பொறுப்பாளியாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. போலியாக ஆவணம் தயாரித்து தரும் ஆடிட்டர்கள், அதற்கு சான்றளிக்கும் வழக்கறிஞர்களும் இனி தப்பிக்க முடியாது என்ற சூழலை உருவாக்க வேண்டும் என்றும் சிவிசி வலியுறுத்தியுள்ளது.

இதுபோன்ற தணிக்கையாளர்கள், வழக்கறிஞர்களைக் கண்டறிந்து அவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் அப்போதுதான் வங்கிகளை ஏமாற்றுவது குறையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மோசடி பேர்வழிகளுக்கு பயந்து கடன்

வழங்காமல் போனால் வங்கிகளின் உண்மையான நோக்கம் நிறைவேறாது. அது பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாசின் குறிப்பிட்டுள்ளார். இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவராயிருந்த பாசினுக்கு வங்கியாளர்களின் பிரச்சினை நன்கு தெரியும். வங்கிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை, சவால்களும் அவர் அறிந்ததே.

தில்லுமுல்லுகளை தவிர்க்க, அதன் ஆரம்பத்தை அவர் கண்டுபிடித்து அறிக்கையாக அளித்துள்ளார். இதை ஒவ்வொரு வங்கிகளும் தனது அதிகாரிகளுக்கு அளித்து முன்னெச்சரிக்கையோடு இருக்கச் சொன்னானால் பிரயோசனமாக இருக்கும்.

இந்த பரிந்துரைகளை வங்கியாளர்கள் பொருட்படுத்தாவிடில், வங்கி மோசடிகள் தொடர்கதையாகத்தான் இருக்கும்.
 

- ramesh.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x