

ஆயுள் காப்பீடு, உடல் ஆரோக்கிய காப்பீடு, பொதுக் காப்பீடு என எந்தவொரு காப்பீடாக இருந்தாலும் நெருக்கடி நிலையில் ஆபத்பாந்தவனாக உதவுகிறது. காப்பீடு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை கரோனா பெருந்தொற்று காலத்தில் நம்மில் பலரும் உணர்ந்திருக்கக்கூடும். ஆனாலும், உலக அளவில் ஒப்பிடுகையில் நமது நாட்டில் காப்பீடு எடுத்திருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. காப்பீட்டு துறை குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் பார்க்கலாம். இந்தியாவில் முதன் முதலாக 1818-ம் ஆண்டு ஆயுள் காப்பீட்டுக் கழகமான `ஓரியண் டல் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி’ தொடங்கப்பட்டது.
அதன்பின் 1850-ல் முதல் பொதுக் காப்பீட்டு நிறுவனமான `தி ட்ரைட்டன் இன்சூரன்ஸ் கம்பெனி’ தொடங்கப்பட்டது. 1956-ல் சுமார் 245 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் நாட்டுடமையாக்கப்பட்டு `லைஃப் இன்சூரன்ஸ் கார்பொரேஷன் (எல்ஐசி)’ நிறுவனமும், 1972-ல் 107 பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் தேசிய உடைமையாக்கப்பட்டு `ஜெனரல் இன்சூரன்ஸ் கார்பொரேஷன் ஆஃப் இந்தியா’ நிறுவனமும் உருவாக்கப்பட்டன. 1991-ல் தாராளமய கொள்கை அமலான பிறகு இத்துறையில் தனியார் நிறுவனங்களும், வெளிநாட்டு முதலீடும் அனுமதிக்கப்பட்டன. 2021-ல் இத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் அளவு 74 சதவீதமாக உயர்த்தப்பட்டது.