

ஏப்ரல் மாதம் நெருங்கும் நிலையில், நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க தயாராகி வருகின்றன. இதனிடையே, வரும் நிதியாண்டு முதல் ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு வழங்கப்படும் என்ற மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பால் ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனிடையே, 2025-ல் இந்திய நிறுவனங்களில் எதிர்பார்க்கப்படும் சம்பள உயர்வு குறித்து ராண்ட்ஸ்டாட், மூடிஸ் போன்ற நிறுவனங்கள் ஆய்வுகளை நடத்தி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலேயே அதிக சம்பள வளர்ச்சியுடன் இந்தியாவின் கார்ப்பரேட் துறை முன்னிலை வகிக்கிறது. மனிதவள ஆலோசனை நிறுவனமான ராண்ட்ஸ்டாட், சமீபத்தில் வெளியிட்ட 'இந்தியாவில் சம்பளப் போக்கு அறிக்கை'யில், 2025-ல் இந்தியாவில் சராசரியாக 9.5% சம்பள உயர்வு இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 2024 நவம்பரில் மூடிஸ் வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் அதிகரிக்கும் நுகர்வு, குறையும் பணவீக்கத்தால் 7.2% GDP வளர்ச்சியை கணித்திருந்தது. எனினும், இந்த கணிப்பு பின்னர் குறைக்கப்பட்டது.