

கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் (48) 25 ஆண்டுக்கு முன்பு வேலைக்காக இங்கிலாந்து சென்றார். தகவல் தொழில்நுட்ப துறையில் 10 ஆண்டுகளாக வேலை செய்த அவர், கடந்த 2010-ம் ஆண்டு லண்டனை தலைமையகமாகக் கொண்டு, அதேநேரம் தனது சொந்த ஊரை குறிக்கும் வகையில் கோவை.கோ என்ற பெயரில் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கினார். இதன் அலுவலகம் கோவையிலும் இயங்குகிறது.
இந்நிறுவனம் மென்பொருள் தீர்வுகளை வழங்கி வருகிறது. கடந்த 2011-ல் பிஸ்டாக்360 என்ற பெயரில் தனது முதல் மென்பொருளை அறிமுகம் செய்தது. 5 முக்கிய மென்பொருளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 240-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். எண்ணெய் நிறுவனமான ஷெல், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், ஊடக நிறுவனமான பிபிசி ஆகியவை இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.