

மேல்நிலை பள்ளியில் படிக்கும் போது தொழிற்கல்வி பாடப்பிரிவு மூலம் தொழில் பழகும் உத்தி மாணவர்களுக்கு கற்றுத் தரப்படுகிறது. இது போல, தொழில்முனைவு கல்வியையும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்றுத் தரவேண்டியது அவசியமாகிறது. தொழில்முனைவோராக ஆவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் கிடையாது.
வரலாற்றில் இளம் வயதில் பெரும் தொழில் முனைவோராக உருவானவர்கள் முதல் 60 வயதுக்கு மேல் தொழில்முனைவோராக உருமாறியவர்கள் என பலரும் உள்ளனர். வயது தடையில்லை என்றாலும், சவாலுடன் துணிந்து செல்பவராகவும், புத்தாக்கம் நிறைந்தவராகவும், மீண்டு வரும் திறன் கொண்டவராகவும் தொழில்முனைவோர் இருக்க வேண்டும் என்பது அடிப்படையாகும்.
அவ்வாறான அடிப்படை பண்புகளை ஒரே நாளில் பட்டை தீட்டி பெற்றுவிட முடியாது. எனினும் அதற்கான பட்டறையாக பள்ளி மற்றும் கல்லூரிகளை மாற்ற முடியும். மேலும் அந்தப் பட்டறையின் அரணாக இருந்து வழிகாட்ட அரசின் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை என அனைத்தும் கைகோர்க்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், யுனிசெப் அமைப்பு மற்றும் பள்ளிக் கல்வித் துறை இணைந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இந்த திட்டம் படைப்பாற்றலுடன் சிந்திக்கவும், புதுமையான தீர்வுகளை உருவாக்கவும், தொழில்முனைவு திறன்களை வளர்க்கவும் மாணவர்களை ஊக்குவிக்கிறது. அத்துடன் சிறந்த மாணவர்கள் குழுக்களின் புத்தாக்க சிந்தனைகளுக்கு ரூ.25,000 முதல் ரூ.1 லட்சம் வரை ரொக்கப் பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
குஜராத்தில்.. அதேபோல் குஜராத் மாநிலத்தில் இருக்கும் இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், மாணவர்களிடத்தில் தொழில்முனைவு திறனை ஏற்படுத்தும் வகையில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு தனியாக ஒரு பாடத்திட்டத்தை வைத்துள்ளது. மேலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 5 நாள் தங்கி பயிலும் பயிற்சி முகாம் ஒன்றையும் நடத்தி வருகிறது. இதுபோல மற்ற மாநிலங்களில் இருக்கும் தொழில்முனைவோர் சார்ந்த நிறுவனங்களும் செயல்படுத்த முன்வரலாம்.
கல்லூரி கல்வியில்.. அடுத்து கல்லூரிக் கல்வியில் தொழில்முனைவு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலான பாடத்திட்டத்தை தொடங்க வேண்டும். அது செயல்முறைக் கல்வியை முன்னிறுத்தி இருக்க வேண்டும். மேலும் கல்லூரிகள் தொழில்முனைவு சார்ந்து இருக்கும் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளலாம். குறிப்பாக தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை (TANSIM - Tamil Nadu Startup and Innovation Mission) அமைப்பானது பல்வேறு வகைகளிலும் செயலாற்றி வருகிறது.
இன்று தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 120-க்கும் மேற்பட்ட இன்குபேட்டர் மையங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இன்குபேட்டர் மையம் அமைக்க வேண்டும் என முனைந்து வரும் அதே வேளையில் ஸ்டார்ட் அப் சார்ந்து கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகளையும் TANSIM நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் தற்போது 9,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வெவ்வேறு துறைகளில் இயங்கி வருகின்றன. அவைகளைக் கொண்டு கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகளை நடத்தலாம். சர்வதேச தொழில்முனைவு மேற்பார்வை அமைப்பானது இளம் வயதினரிடையே விதைக்கும் தொழில்முனைவு பற்றிய புரிதல் என்பது அவர்களிடையே நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளது. எனவே அதற்கு ஏற்றார்போல் பாடத்திட்டம் முதற்கொண்டு அவர்களின் சிந்திக்கும் செயல்திறன் வரை நாளும் வளரும் தொழில்நுட்ப உதவியுடன் தொழில்முனைவு எண்ணத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.
இவ்விடத்தில் இறுதியாக நடந்த நிகழ்வு ஒன்றை குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும். 1988-ம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகத்தில் (IIM-A) நடந்த பட்டமளிப்பு விழாவில் வெண்மைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்ட வர்கீஸ் குரியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, "பட்டம் பெற்றுச் செல்லும் நீங்கள் அனைவரும் ஏதேனும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து அவர்களின் ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வதற்காகத்தானே உங்களின் வாழ்க்கையை செலவழிக்கப் போகிறீர்கள். இதன்மூலம் உங்களின் இலக்கையும் முடித்துக் கொள்கிறீர்கள். இனிமேலாவது உங்கள் ஆசையின் குறிக்கோளை நம் நாட்டுக்கு உகந்த வளர்ச்சியின் குறியீடாக மாற்றுங்கள்” என்று 30 நிமிடம் உரையாற்றி முடித்துள்ளார்.
இதனைக் கேட்ட IIMA மாணவர்களில் பலர் அடுத்த ஆண்டில் தொழில்முனைவோராக ஆகி வரலாறு படைத்தனர் என்று அந்த ஆண்டைச் சேர்ந்த மாணவரும் தற்போதைய இன்போ எட்ஜ் நிறுவனத்தின் நிறுவனருமான சஞ்சீவ் தெரிவித்துள்ளார். எனவே, கல்விக்கூடங்களில் தொழில்முனைவை வளர்க்க உரமிடுவோம். அது நம் மண்ணில் அறுவடையாகி நாளைய மக்களுக்கு கனி தரட்டும்.
- தொடர்புக்கு: saraths1995@gmail.com