இந்திய சிஇஓ-வை நீக்கிய ‘ஸ்டார்பக்ஸ்’

லக்‌ஷ்மன் நரசிம்மன்
லக்‌ஷ்மன் நரசிம்மன்
Updated on
1 min read

உலகின் மிகப் பெரிய காபி விற்பனை நிறுவனமான ‘ஸ்டார்பக்ஸ்', கடந்த ஆண்டு இந்தியரான லக்‌ஷ்மன் நரசிம்மனை சிஇஓ-வாக நியமித்தது. ஆனால், ஓராண்டுதான் ஆகி இருக்கிறது. இதற்குள்ளாக லக்‌ஷ்மன் நரசிம்மனை நீக்கி விட்டு சிபொடில் மெக்ஸீகன் கிரில் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்த பிரைன் நிக்கோலை தனது புதிய சிஇஓ-வாக ஸ்டார்பக்ஸ் நியமித்துள்ளது.

அமெரிக்காவில் 1971-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டார்பக்ஸ், இன்று 80 நாடுகளில் 35,711 கடைகளைக் கொண்டிருக்கிறது. நிறுவனச் செயல்பாடுகளை வளர்த்தெடுக்க 2023 மார்ச் மாதம் லக்‌ஷ்மன் நரசிம்மன் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார். நரசிம்மன் 1967-ம் ஆண்டு புனேயில் பிறந்தவர். இயந்திரவியல் பொறியியல் முடித்தவர். மெக்கின்ஸி, பெப்சிகோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்தவர். ஸ்டார்பக்ஸின் சிஇஓ-வாக நியமிக்கப்படுவதற்கு முன்பாக ரெக்கிட் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருந்தார்.

இவரது தலைமையின் கீழ் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் செயல்பாட்டில் புதுமை கொண்டுவரப்படவில்லை என்றும் இதன் காரணமாக விற்பனை குறைந்துள்ளது என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், முதலீட்டாளர்கள் புதிய சிஇஓ-வை நியமிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்தனர்.

இதனிடையே நரசிம்மன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் மாலை 6 மணிக்கு மேல் அலுவலக வேலைகளை பார்க்க மாட்டேன். மிக முக்கியமான வேலை என்றால் மட்டுமே 6 மணிக்கு பிறகும் அதில் தொடர்வேன்” என்றார். அவரது இந்தக் கருத்துக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருந்ததோ அதே அளவுக்கு எதிர்ப்பும் இருந்தது.

‘‘ஒரு நிறுவனத்தின் சிஇஓ 6 மணிக்கு பிறகு வேலை பார்க்க மாட்டேன் என்று சொன்னால், அந்த நிறுவனம் எப்படி வளர்ச்சி அடையும்’’ என்று பலர் கேள்வி எழுப்பினர். இந்தச் சூழலில், அவரை சிஇஓ பொறுப்பிலிருந்து ஸ்டார்பக்ஸ் நீக்கியுள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in