

நீங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, ஒட்டுமொத்த 40 மாணவர்களும் ஒன்றாகத்தான் படித்திருப்பீர்கள். உங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்விதான் வழங்கப்பட்டிருக்கும். ஒரே மாதிரியான தேர்வு தான் நடத்தப்பட்டிருக்கும்.
ஒரே வகுப்பறையில் அமர்ந்து, ஒன்றாகப் படித்து, ஒன்றாக உணவருந்தி, ஒன்றாக ஓடி விளையாடிய நீங்கள் அனைவரும், இன்று - சுமார் 20 வருடங்கள் கழித்துத் திரும்பிப் பார்க்கிறபோது, எல்லோரும் வாழ்வின் ஒரே இடத்தில் இல்லாமல் ஒவ்வொருவரும் வாழ்வின் வெவ்வேறு நிலைகளில் இருக்கிற எதார்த்தம் புரியும்.
ஏன் இப்படி நிகழ்ந்தது ?
ஒரே பள்ளி, ஒரே கல்வி, ஒரே போதனை.. இருப்பினும் உயர்வில் மட்டும் ஏன் இந்த ஏற்றத் தாழ்வு ?
இதற்கு அறிஞர் எமர்சன் சொல்கிற பதில், "நாள் முழுவதும் நீங்கள் எதுவாக ஆக வேண்டும் என்று திரும்பத் திரும்ப எண்ணிக் கொண்டே இருக்கிறீர்களோ, அதுவாகவே ஆகிறீர்கள்" (A MAN IS, WHAT HE THINKS ABOUT ALL DAY LONG) என்பதுதான்.
ஆம்! படிக்கிற பாடத்தைவிட நம்முடைய சிந்தனைதான் மிக முக்கியம். நாம் என்னவாக விரும்புகிறோம் என்பதில் இருக்கிறது வெற்றியின் சூட்சுமம்.
நம் மனதில் நம் வளர்ச்சி பற்றிய சிந்தனை தொடர்ந்து உயர்வாக இருக்கும் பட்சத்தில், அதற்கு உதவக்கூடிய பாசிட்டிவான மனிதர்கள் நம்மோடு இணைவார்கள். நம்முடைய வாழ்க்கையும் உயரும்.
நாம் எதிர்மறை சிந்தனைகளோடு ஒரு தயக்கத்துடன் வாழ்க்கையை நகர்த்தினால் அது சார்ந்த மனிதர்களே நம்மோடு ஒட்டுவார்கள். வாழ்வோ மேலே உயராமல், இருந்த இடத்திலேயே இருக்கும்.
"என்னால் முடியும் என்று எவன் நம்புகிறானோ, அவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்" என்கிறார், சி. டபிள்யூ. லாங்னேக்கர். (THE MAN WHO WINS, IS THE MAN WHO THINKS 'HE CAN' - C. W. LONGENECKER).
ஆம்! இது முற்றிலும் உண்மையே. உங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றால், முதலில் உங்களால் முடியும் என்று நம்ப வேண்டும். நீங்கள் எங்கு செல்ல விரும்புகிறீர்களோ அதைப் பற்றியே திரும்பத் திரும்பத் திரும்ப எண்ணிக் கொண்டு மனதை நம்ப வைத்தால் 'ஈர்ப்பின் விதி' (LAW OF ATTRACTION) யினுடைய உதவியால் நீங்களும் வாழ்க்கையில் உச்சத்தை அடைய முடியும்.
- rkcatalyst@gmail.com