

யாரோடும் பட்டும் படாமல் இருப்பவர்களை ‘தாமரை இலைத் தண்ணீர் போல' என்கிற உவமையால் அழைப்பது உண்டு. உண்மையில் தாமரை இலையில் தண்ணீர் ஏன் ஒட்டுவதில்லை? நீரின் அடிப்படைத் தன்மையே அது தொடர்புகொள்ளும் பொருளை நனைப்பதும், ஒட்டிக்கொள்வதும்தான்.
அப்படியிருக்கையில் தாமரை இலையில் மட்டும் ஏன் அவ்வாறு நடப்பதில்லை? சாதாரணமாக, தண்ணீர் ஒட்டாத தன்மை ‘நீர் விலக்கம்' (hydrophobicity) எனப்படுகிறது. தாமரை இலையில் மட்டுமல்ல இன்னும் சில இலைகளுக்கும் இந்த ‘நீர் விலக்கம்' தன்மை உண்டு.
ஆனால், தாமரை இலையில் நடப்பது உச்சபட்ச தண்ணீர் ஒட்டாத தன்மை. அது ‘மிகை நீர் விலக்கம்' (super-hydrophobicity). தாமரை இலையின் இந்த மிகை நீர் விலக்கத்திற்கான காரணம் குறித்துப் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன.
அதன்மூலம் ‘பரிணாமம் குறித்து நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள புரிந்துகொள்ள மனிதர்களின் வாழ்க்கையும் சிந்தனை முறையும் பல்வேறு வகைகளில் மேம்படும்' என்பது தெரியவந்துள்ளது.
தண்ணீர் எப்படி நனைக்கிறது?
எந்த ஒரு பொருளோடும் தொடர்பில் இல்லை என்றால் நீர்த்துளி கோள வடிவில் இருக்கும். காரணம், ஒரு குறிப்பிட்ட பருமனுக்குக் கோள வடிவம்தான் மிகக் குறைந்த பரப்பு கொண்டது. மிகக் குறைந்த பரப்பு இருந்தால் மிகக் குறைந்த மேற்பரப்பு ஆற்றல் (surface energy) மட்டுமே செலவாகும். பருமனுக்குள் இருக்கும் ஒரு நீர்மூலக்கூறைப் பரப்புக்கு கொண்டுவர வேண்டுமென்றால் அதன் வேதிப்பிணைப்புகளை உடைக்க வேண்டும்.