

வடசென்னைவாசிகளை மூச்சுத்திணற வைக்கிறது ‘கழிவிலிருந்து மின்சாரம் திட்டம்’ தொடர்பான சென்னை மாநகராட்சியின் அறிவிப்பு. கொடுங்கையூரில் எரி உலை மூலமாகக் குப்பைகளை அகற்றும் இத்திட்டம் மக்களின் தொடர் எதிர்ப்பால் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இத்திட்டம் மீண்டும் தூசு தட்டப்பட்டிருக்கிறது.
எரி உலைக்குச் செல்லும் அணுகுசாலை, ஈரநிலப் பகுதியொன்றை முதன்மைச் சாலையோடு இணைக்கும் நோக்கில் சாலை ஆகியவற்றுக்காக 10.69 கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ‘40 ஆண்டுகளாகத் தொடர்கிற பிரச்சினை இது’ என்கிறார் வடசென்னை குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் டி.கே.சண்முகம்.
“அப்போது ‘பில்லுப் பண்ணை’ என்றழைக்கப்பட்ட இந்தப் பகுதியைச் சுற்றிப் பெரிதாக வீடுகள் இல்லை. நகரத்தில் வீடுகள் பெருக, மக்கள்தொகை அடர்த்தியும் அதிகரிக்க, நாற்பதாண்டுகளாகக் கொட்டப்பட்டு வரும் குப்பைகளின் பின்விளைவுகளும் தொடர, இந்த இடமே சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு எடுத்துக்காட்டாகி இருக்கிறது.
அதை மேலும் நரகம் ஆக்குகிற வகையில் எரி உலை வேறு வந்தால் என்னவாகும்? தமிழகத்தின் மொத்தக் குப்பையில் 45% சென்னையில் கொட்டப்படுகிறது. அது ஒரு நாளைக்குச் சுமார் 7,100 டன். அவை கொடுங்கையூரிலும் பெருங்குடியிலும் (தென்சென்னை) கொட்டப்படுகின்றன.
சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் 8 மண்டலங்கள், கோயம்பேடு சந்தைக் கழிவுகள் இவை அனைத்தும் கொடுங்கையூருக்குக் கொண்டுவரப்படுகின்றன” என்கிறார் சண்முகம்.
ஆபத்தான திட்டம்:
மட்கும் கழிவை உரமாக்கும் ‘பயோ மைனிங்’, வடசென்னை வளர்ச்சித் திட்டம் ஆகியன வடசென்னை மக்களுக்கு ஆசுவாசம் அளித்தது. ஆனால், கடந்த ஆண்டு ‘WTE (Waste to Energy)’ எனப்படும் கழிவிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
குப்பையில் ஈரக்கழிவு போக, மீதமுள்ள 2,100 டன் குப்பையை எரிப்பதே இதன் அடிப்படை. இவ்வாறு குப்பையை எரிக்கும்போது மிஞ்சும் டன் கணக்கிலான சாம்பல் கடும் நச்சுத்தன்மை கொண்டது.