

எருக்கு விதை, காத்தாடி மர விதை | படங்கள்: ப. ஜெகநாதன் |
எங்கள் காட்டிலிருந்து சுமார் மூன்று கி.மீ. தொலைவில் மலைத்தொடர் கிழக்கு-மேற்காக நீண்டு செல்கிறது. வெயில் காலத்தில் மலைக் காடுகளில் தீப்பற்றி எரிவது தெரியும். அண்மைக் காலமாக அப்படித் தீப்பிடிக்கவில்லை. அதுவே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
காட்டு மரங்களில் தணக்கு மரமும் ஒன்று. மலையிலிருந்துதான் தணக்கு இங்கும் பரவியிருக்க வேண்டும். முற்றிய தணக்கு விதைகள் மீண்டும் பல இடங்களிலும் உயிர்ப்புடன் எழுவதற்காகத் தம் சுற்றத்தைப் பிரிந்து காற்றில் அலைந்து திரியும்.
தாய் மரத்தின் அடியில் தங்காமல் சோலையை விட்டு வெளியேறும் விதைகள், காற்றின் துணையோடு எல்லைகளைத் தாண்டி நீண்ட தொலைவு பறந்து செல்லும். அப்படி விரைவாகப் பறப்பதற்கு ஏற்ப ஆற்றல் மிகுந்த அழகிய சிறகுகளைக் கொண்டவை தணக்கு விதைகள். விதையைச் சுமந்துகொண்டு அந்தச் சிறகுகள் சுழன்று பறக்கும்.
அவற்றின் சுழற்சியுடன் பம்பரச் சுழற்சியும் தோற்கும். மிக நீண்ட தொலைவு பறந்து சென்று, தங்குமிடத்தில் மழையின் உதவியால் தன் இனத்தைப் பரப்பத் தனி அழகோடு உயிர்ப்புடன் கிளர்ந்தெழும் அழகுப் படைப்பு.