

பல்வேறு நாட்டுக் காய்கறி விதைகளைப் பல ஆண்டுகளாகப் பாதுகாத்து வருகிறோம். பெங்களூரு வட மாவட்டத்தில் தொட்ட பல்லபுரா (Doddaballapura) நகருக்கு அருகில் இயற்கை வேளாண் அறிஞர் நாராயண ரெட்டியினுடைய தோட்டம் உள்ளது.
இயற்கை வேளாண்மையில் அவரின் பங்கு அளப்பரியது. எங்களுக்கு அவரை நம்மாழ்வார் அறிமுகப்படுத்தினார். அண்மையில் மறைந்த என் அறிவியல் ஆசிரியர் முத்துக்குமரன், பல்லடம் நகரில் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய தாய்த்தமிழ்ப் பள்ளியில் மாதந்தோறும் நடத்திய இயற்கை வேளாண்மைக் கூட்டங்களில் கலந்துகொள்ள நம்மாழ்வார் வருவார். அவரைப் பல்லடத்துக்கு அறிமுகப்படுத்தியவர் கோவை ஞானி.
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், என் அம்மாவும் நானும் நம்மாழ்வாருடன் தொட்டபல்லபுராவில் உள்ள நாராயண ரெட்டியினுடைய தோட்டத்துக்குச் சென்றோம்.
அதன்பின் அவர் எங்கள் ஊருக்கு வந்தபோது சீத்தாப் பழம், எள், இலங்கையில் இருந்து எடுத்துவந்த வெண்டை விதைகள் ஆகியவற்றைக் கொடுத்தார். நாங்கள் மீண்டும் 2004ஆம் ஆண்டு அவருடைய ஊருக்குச் சென்றபோது, கோவைக்கொடியின் குச்சிகளை எடுத்துவந்தோம்.