

தென் சென்னையின் முக்கிய கரையோர ஈரநிலங்களான பள்ளிக்கரணை, கோவளம் - நெம்மேலி சதுப்பு நிலப்பகுதிகள் சந்தித்துவரும் சூழலியல் அச்சுறுத்தல்கள், நீரியல் சிக்கல்கள், வாழ்வாதாரப் பாதிப்புகள் குறித்துச் சுற்றுச்சூழல் நிபுணர்கள், ஆய்வாளர்கள், உள்ளூர் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘ஈரநிலங்கள் பாதுகாப்புக் கூட்டமைப்பு', ‘சூழல் அறிவோம்', ‘மதராஸ் இயற்கை ஆர்வலர்கள் சங்கம்', பிற அமைப்புகள் இணைந்து நடத்திய ‘தென்சென்னை கடற்கரையைச் சேர்ந்த ஈரநிலங்கள் அறிவோம்' நிகழ்வில், கள ஆய்வுகளும் அவசரத் தேவைகளும் வலியுறுத்தப்பட்டன.
அடைபடும் நீர்வழிகளும் வெள்ள அபாயமும்
230 சதுர கிலோமீட்டர் நீர்ப்பிடிப்புப் பகுதிக்கு இயற்கையான வெள்ள நீர் வடிகாலாகச் செயல்படும் ராம்சர் தளமான பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் முதன்மை நீர்வழிப்பாதைகள் தற்போது பெரிதும் தடைபட்டுள்ளன.
பழைய மகாபலிபுரம் சாலையில் ஒக்கியம்பேட்டை அருகில் மெட்ரோ ரயில் பணி களுக்காக அமைக்கப்பட்ட தற்காலிகக் கட்டுமானத் தடைகளால், ஒக்கியம் மடுவின் நீர்வழிப்பாதை அகலம் 8 மீட்டருக்கும் குறைவாகத் தற்போது சுருக்கப்பட்டுவிட்டது.
இதனால் நீரோட்டம் தடைபட்டு, மே - ஜூன் மாதங்களில் வழக்கமாக உருவாகும் சேற்றுப்படுகை (Mudflats) இந்த ஆண்டு உருவாகவில்லை. இது நிலத்தில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் பறவைகளின் வாழிடத்தைப் பாதித்துள்ளதுடன், பெரிய பூநாரை (Greater Flamingo) போன்ற வலசைப் பறவைகளின் வருகையையும் குறைத்துள்ளது.