

சிறுவயதில் கிராமங்களில் உள்ள தோப்புகளில் சப்பாத்திக்கள்ளி பழம் பறித்து உண்பது ஒரு தனிக்கலை. அதன் முட்கள் ஒழுங்கற்று வெவ்வேறு திசையில் இருப்பதால், விரல்களை வெவ்வேறு சாய்வுக் கோணத்தில் வைத்து அப்பழங்களைப் பறிக்க வேண்டும். அப்படி இருந்தும் முள் குத்திவிடும். எலுமிச்சைப் பழத்தைப் பறிக்கும்போதுகூட இப்படித்தான் கவனமாக இருக்க வேண்டும்.
வெவ்வேறு வண்ணங்களில் இருக்கும் பூக்கள் எவ்வாறு அழகோ அதேபோல் வெவ்வேறு அளவுகளில், வெவ்வேறு வடிவங்களில் தாவரங்களுக்கு இருக்கும் முட்களும் அழகுதான். தாவரங்கள் தங்களைத் தகவமைத்துக்கொள்ளப் பரிணாமம் உருவாக்கிய திறன்மிகுந்த, அதே வேளை சிறந்த வழிமுறைதான் முட்கள். பள்ளியில் படிக்கும் இயற்பியலில் ஆரம்பித்து ஆராய்ச்சிக்கூடத்தில் இருக்கும் அறிவியல்வரை பல்வேறு விஷயங்களை முட்களில் இருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.
விசையைவிட அழுத்தமே முக்கியம்
தாவரங்களை உண்ணும் உயிரினங் களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தாவரங்களுக்கு முட்கள் இருக்கின்றன என்பது ஓர் அடிப்படை உண்மை. இதன் கூர்தன்மை மிக எளிதாக தோலைக் கிழித்து உள்ளே சென்றுவிடும்.
ஓர் உயிரினம் மிகக்குறைவான விசையை முள்ளின் மீது கொடுத்தாலும்கூட, நியூட்டனின் மூன்றாம் விதிப்படி அதே அளவு எதிர்விசையை முள் அந்த உயிரினத்தின் மீது கொடுக்கிறது.
ஆனால் முள்ளின் கூர்தன்மையால், இந்தக் குறைந்த விசை மிக மிகக் குறைந்த பரப்பளவில் உயிரினத்தின் தோல் மீது செயல்படுவதால் அழுத்தம் (pressure) அதிகமாக இருக்கிறது. அதனால் சரக்கென்று தோலைக் கிழிக்கிறது.