

வெள்ளைக்கண்ணி
மூடு பனி முற்றிலும் விலகாத முன்பனிக் காலைப் பொழுது. அறை வெப்பம் 13 டிகிரி செல்சியஸ் என்கிற அளவில் இருந்தது. மங்கலான சூரிய ஒளியே வெளியில் பரவியிருந்தது. ஜன்னல் திரை வழியே சூரிய ஒளி வீட்டிற்குள்ளும் நுழைந்திருந்தது.
சோபாவில் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்த வேளையில் வாகன ஓசைகளையும் தாண்டி ஏதோ ஒரு குருவியின் கீச்சொலி காதில் விழுந்தது. காபிக் கோப்பையை வைத்துவிட்டுக் கதவைத் திறந்து பால்கனிக்குச் சென்றேன். அறையைவிட அங்கு வெப்பம் இன்னும் குறைவாக இருந்ததால், சட்டென்று உடல் குளிர்ந்தது.
வீட்டருகே சுமார் 30 அடி உயரத்துக்கு வளர்ந்திருந்த ஏழிலைப்பாலை மரத்தை இரண்டாம் தளத்திலிருந்து கவனித்தேன். ஓரிலைக்காம்பில் ஏழு இலைகள் காணப்படுவதால் இது ஏழிலைப்பாலை (Alstonia scholaris) எனப்படுகிறது.
இது பசுமைமாறா மர வகை. இதன் இயற்கை வாழிடம் மழைக்காடுகள், வெப்பமண்டலம், துணை வெப்பமண்டலப் பகுதிகள். உத்தராகண்ட் மாநிலத்தின் தெராய் நிலப்பரப்பு பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இவை வளர்க்கப்பட்டுள்ளன.
அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டதை அதன் தனித்துவமான நறுமணம் கொண்ட வெள்ளை-மஞ்சள் நிறப் பூங்கொத்துகள் நினைவூட்டும். இரண்டு மாதம் பூத்த பூக்கள் தற்போதைய கடும் குளிரில் கருகி இருந்தன.