

குழந்தைகளையோ பள்ளி மாணவர்களையோ பெற்றோர்கள் தம் பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற இயற்கை சார்ந்த இடங்களுக்குப் பாதுகாப்பு அச்சத்தின் காரணமாகச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அதற்கு மாறாகச் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயற்கைச் சூழலுடன் அமைந்துள்ள ஊனமாஞ்சேரி ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் செயல்பட்டார்கள்.
தங்கள் பகுதியில் உள்ள ஈரநிலம், அதன் சூழலியல், அதைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்துத் தங்கள் பள்ளிச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்களின் முன்னிலையில் ‘கேர் எர்த் டிரஸ்ட்’ என்கிற அரசுசாரா நிறுவனத்தின் உதவியுடன் இவர்கள் அறிந்து வருகின்றனர்.
எங்களின் பயணம்: இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இயற்கைக் கல்வித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி தொடங்கியது. அம்மாணவர்ளை உற்றுநோக்கி அவர்களின் ஆர்வம் எதில் உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்றாற்போல் அவர்களுடன் பயணிக்கத் தொடங்கினோம்.
முதலில் அவர்களின் கண்களைக் கவரக்கூடிய வண்ணமயமான, படங்களுடன் கூடிய சுற்றுச்சூழல் கதை நூல்களுடன் கூடிய ஒரு நூலகத்தை அமைத்தோம். மாணவர்களுடன் நாங்களும் அமர்ந்து கதைகளைப் படித்து, அக்கதைகளைப் பற்றி உரையாடினோம். இது அவர்களின் ஆர்வத்தை இயற்கையின்பால் தூண்டியது.