

வரலாறு, கலை, தொன்மை ஆகியவற்றில் சிறப்புமிக்க கட்டிடங்களையும் இடங்களையும் அரசின் தொல்லியல் நிறுவனங்கள் பாதுகாத்துவருகின்றன. அதேபோன்று எந்தவொரு மனிதக் கட்டுமானமும் இல்லாத, பார்ப்பதற்குப் பாலைவனம் போன்று காட்சியளிக்கும் மண்குன்றுகளையுடைய நிலத்தையும் இந்தியப் புவியியல் நிறுவனம் பாதுகாத்துவருகிறது.
அத்தகைய சிறப்புவாய்ந்த, அனைவராலும் அறியப்படாத, அரிய நிலப்பகுதி தமிழ்நாட்டில் இருக்கிறது. அரியலூர்–பெரம்பலூர்–திருச்சி–கடலூர் பகுதிகளை உள்ளடக்கிய காவிரிப் படுகையின் இப்பகுதி, புவியியலாளர்களால் ‘உண்மையான திறந்தவெளிப் பண்டைய உயிரின உலகம்’ (a veritable open-air palaeontological laboratory)என்று புகழப்படும் அளவுக்கு, இப்பகுதி புதை படிவ வளத்தைக் கொண்டது.
அரிய நிலப் பகுதி
அதாவது, மனித வரலாற்றுக்கும் முந்தைய காலத்தில், புவியில் ஒரே நிலப்பரப்பாக இருந்த நிலப்பகுதி இரண்டாகப் பிரிந்தது. இதில் ‘கோண்டுவனா’ எனப்படும் தென் கோளத்திலிருந்து ‘இந்தியக் கண்டத்தட்டு’ மட்டும் பிரிந்து வடக்கு நோக்கி நகர்ந்து, ஆசியக் கண்டத்தோடு இணைந்தது. அவ்வாறு நகர்ந்த காலக்கட்டத்தில், குறிப்பாக கிரிடேசியஸ் (Cretaceous) காலத்தில் ( 14.5 முதல் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு), காவிரிப் படுகையின் சில பகுதிகள் கடலில் மூழ்கின.
அதாவது தற்போதைய மதிப்பீட்டில், கிழக்குக்கடற்கரையிலிருந்து, 100 கி.மீ. மேற்குத் திசையில் பெரம்பலூர் வரை கடற்பகுதியாக இருந்துள்ளது. இதன் விளைவாக இப்பகுதியில் ஆழம் குறைந்த கடற்பகுதிகள் உருவாயின.
இத்தகைய சூழல் பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் செழித்து வாழ்வதற்கு ஏற்றதாக இருந்தது. கடல்வாழ் உயிரினங்கள் இறந்தபோது அவற்றின் சடலம் அல்லது ஓடுகள் கடலடியில் படிந்தன. அவற்றின் மீது நுண்ணிய மண், மணல், கால்சியம் கார்பனைட் போன்ற கனிமப் பொருள்கள் தொடர்ந்து படிந்து அவற்றைப் புதைத்தன.
அவையெல்லாம் தொல்லுயிர்ப் புதைபடிவங்களாக (Fossils) உருமாற்றம் அடைந்தன.ஆங்கிலேய ஆராய்ச்சி 1862ஆம் ஆண்டில், திருச்சிராப்பள்ளி – காவிரிப் படுகையின் கிரிடேசியஸ் காலப் பாறைகளை, இந்தியாவில் பணியாற்றிய ஆங்கிலேயப் புவியியலாளர், ஹென்றி பிரான்சிஸ் பிளன்போர்டு (Henry Francis Blanford) ஆய்வுசெய்தார்.
இவற்றை, ஊற்றத்தூர்ப் பாறைக்குழு (Uttattur Group), திருச்சிராப்பள்ளிப் பாறைக்குழு (Trichinopoly Group), அரியலூர்ப் பாறைக்குழு (Ariyalur Group) என்று மூன்று முதன்மைப் பாறைக்குழுக்களாக வகைப்படுத்தினார். இவை அப்பகுதி ஊர்களின் பெயரில் தற்போது குறிப்பிடப்படுகின்றன.