

காலைப் பொழுதின் மென்மையான ஒளி பள்ளி வளாகம் முழுவதும் பரவுகிறது. மைதானத்தின் ஓரத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து நிற்கும் முதிர்ந்த வேப்பமரம் காற்றில் மெதுவாகச் சலசலக்கிறது. அதன் கிளைகளில் சிட்டுக்குருவிகள் கீச்சிடுகின்றன.
அருகிலுள்ள பூச்செடிகளில் வண்ணத்துப்பூச்சிகள் சிறகடிக்கின்றன. சற்றுத் தள்ளி அகன்ற கிளைகளை விரித்த புங்கமரம் தன்னை அறியாமலேயே பல குழந்தைகளுக்கு நிழலாக நிற்கிறது. தரையில் சிறு செடிகளும் புற்களும் பச்சைப் பாய் விரித்திருப்பதுபோல் பரவியுள்ளன.
அந்தச் சூழலில் மாணவர்களிடம் ஆசிரியர் ஒரு கேள்வியைக் கேட்கிறார்: “இங்கே உயிருள்ளவை என்னென்ன இருக்கின்றன?” பதில்கள் தயக்கமின்றி வந்து விழுகின்றன: “குருவி இருக்கிறது…”, “பட்டாம்பூச்சி இருக்கிறது…”, “அணில் ஓடிக்கொண்டிருக்கிறது…”. அதன் பிறகு அமைதி.
மாணவர்கள் கூறிய பதில்கள் சரியானவையே. ஆனால், அந்த இடத்தின் பெரும்பகுதியை நிரப்பியிருந்த வேம்பும், புங்கமும், பூத்திருந்த செடிகொடிகளும், தரையெங்கும் வளர்ந்திருந்த புற்களும் அவர்களின் பதில்களில் இடம்பெறவில்லை.
இது சிறிய சம்பவம் மட்டுமல்ல; இயற்கையை நோக்கும் நமது பார்வையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. நம் கண்களுக்கு முன்னால் விரிந்திருக்கும் பசுமை உலகம், எப்படி நம் கவனத்திலிருந்து அமைதியாக விலகி நிற்கிறது என்பதை இது உணர்த்துகிறது.
தாவரப் புறக்கணிப்பு
நாம் இயற்கையை நேசிக்கிறோம் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறோம். காட்டுயிர்களின் ஒளிப்படங்களை ரசிக்கிறோம். பறவைகளின் குரலைக் கேட்டு மகிழ்கிறோம்.
அரிய உயிரினங்களைப் பற்றிய ஆவணப்படங்களை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். ஆனால், அவை அனைத்தும் வாழ்வதற்கான அடித்தளமாக இருக்கும் தாவர உலகத்தை எத்தனை முறை உணர்ந்திருக்கிறோம்? நாள்தோறும் மர நிழலில் நடக்கிறோம்.
இலைகள் வடிகட்டிய காற்றையே சுவாசிக்கிறோம். தாவரங்கள் உருவாக்கிய உணவையே உண்கிறோம். அவற்றின் மருத்துவப் பயன்களைப் பெறுகிறோம்.
இருந்தும், அவை நம் நினைவிலோ, உரையாடல்களிலோ, பல நேரம் நம் பார்வையிலோகூட இடம்பெறுவதில்லை. இந்த முரண்பாடு ஒரு தனிப்பட்ட அனுபவம் அல்ல, உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்த ஓர் அறிவியல் உண்மை.
பார்வைக் குறைபாடு
தாவரவியல் கல்வியாளர்களான ஜேம்ஸ் ஹெச். வாண்டர்சீ, எலிசபெத் இ.ஷஸ்லர் ஆகியோர் மாணவர்களின் இயற்கை அறிதல் முறையை ஆய்வு செய்தபோது, வியப்பான ஓர் உண்மையைக் கண்டறிந்தனர்.