

ஓவியம்: எம். சுந்தரன்
ஒரு காட்டைப் பற்றியோ, அங்கு வாழும் உயிரினங்களைப் பற்றியோ துறை சாராதவர் பேசும்போதும் எழுதும்போதும் ஒரு திகில் படத்தை விவரிப்பதுபோலவே தொடங்குவார்கள். அது ஒரு ‘பயங்கரமான காடு’, அங்கே ‘சூழ்ச்சி செய்யும் நரி’ இருந்தது, ‘ஆக்ரோஷமான புலி’ வந்தது என்பார்கள்.
இயற்கை, காட்டுயிர்கள் குறித்து இதுபோல் நம்மிடையே பரவிவிட்ட பல்வேறு கற்பிதங்களைத் தகர்த்தவர் ச.முகமது அலி. இயற்கை, காட்டுயிர் குறித்த விவரிப்பு மட்டுமல்லாமல், துறைசார் மொழிநடையும்கூட அறிவியல்பூர்வமாக அமைய வேண்டும் என்று வலியுறுத்தி, அது சார்ந்து முன்னோடியாக வழிகாட்டியவர்.
- ஆண் குயிலுக்குத்தான் இனிமையான குரல் உண்டு. ஆனால், பெண் பாடகிகளுக்கு ‘இசைக் குயில்’ என்று அடைமொழி கொடுக்கிறோம்.
- ஃபீனிக்ஸ் போல் உயிர்த்தெழுவோம் என்கிறார்கள். அது ஒரு புராணப் புனைவுப் பறவை. நிஜத்தில் அதுபோல் ஒரு பறவையில்லை.
- நெருப்புக்கோழி மண்ணுக்குள் தலையைப் புதைத்துக்கொள்வதைப் போல என்கிறோம். நெருப்புக் கோழிகள் தரையில் இடப்பட்ட முட்டைகளைப் பாதுகாக்கவே தலையைக் கீழே சாய்க்கின்றன.
- ஒப்புமையாகக் கூறும்போது வீரத்துக்குச் சிங்கம், இழிவுக்குக் கழுதை, சாவுக்கு ஆந்தை, அன்புக்கு அன்னம், பேய்க்குப் புளியமரம், சமாதானத்துக்குப் புறா என அடையாளப்படுத்துகிறோம். உண்மையில் இந்தக் குணங்களுக்கும் மேற்கண்ட உயிரினங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
இதுபோல் மொழிநடையின் அலங்காரம், வசீகரத்துக்காகச் சேர்க்கப்படும் அடைமொழிகள், விவரிப்புகள் இயற்கை, காட்டுயிர்களைப் பற்றிய அறிவியலுக்கு முரணான பார்வையுடனும் கட்டுப்பெட்டித் தனத்துடனும் இருப்பதைச் சுட்டிக்காட்டியவர் முகமது அலி.
எவ்வளவு பெரிய கவிஞர், தலைவர், எழுத்தாளராக இருந்தாலும் இயற்கையைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் அவர்கள் எழுதியவற்றை அறிவியல் கண்கொண்டு ஆராய்ந்தவர். இந்த விமர்சனங்களை முகமது அலி சொல்லும் முறை இனிப்புத் தடவாத வகையில் இருந்தாலும், அவர் சொல்லும் அத்தனையும் அறிவியல் உண்மைகள்.
துறை சார்ந்து இயங்குபவர்களும் சரி, கவிஞர்-எழுத்தாளர் போன்றோரும் சரி எதைப் பற்றி எழுதுவதாக, பேசுவதாக இருந்தாலும் அடிப்படைகளை ஆழமாக வாசிக்க வேண்டும், தெரியாத விஷயங்களைத் துறை சார்ந்தவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்படுவதை எப்படி ஏற்க முடியும் என்று கேட்பவர்.