

பெரிய பூநாரை | ஒளிப்படம்: பாரத் வித்யாஸ் |
ஆறேழு வருடங்களுக்கு முன்னர் ஒரு நிசப்தமான இரவில் ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திரைப்படத்தில் ஒரு காட்சி - காட்டுக்குள் ஒரு மரக்கிளையில் வந்து அமரும் பறவையை நாயகன் படமெடுக்கிறான்.
இயற்கையிடம் இருந்து கிடைத்த ஓர் ஆசீர்வாதம்போல அந்தக் காட்சியில் அந்தப் பறவை வந்து அமரும் மரத்தில் இருந்து ஓர் இலை உதிர்ந்து நாயகனின் முகத்தில் விழுகிறது. அந்தத் திரைப்படம், அந்தக் காட்சியின் வழியே, எனக்கும் பறவைகளுக்கும், குறிப்பாக ஒளிப்படக் கலைக்குமான பிணைப்பு தொடங்கியது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதுகலைச் சமூகப் பணி முடித்துவிட்டு, பெங்களூருவில் காட்டுயிர்ப் பாதுகாப்புத் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரியத் தொடங்கினேன். பறவைகள் அவதானிப்புத் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் அந்தக் காலத்தில் எனக்குள் முளைவிடத் தொடங்கியது.
பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைத்த காலநிலைப் பள்ளியின் ஒரு பகுதியாக, கழுவேலி பறவைக் காப்பகத்தில் முதல் பறவை அவதானிப்பில் ஈடுபட்டேன். உலகச் சுற்றுசூழல் நாள் (2025 ஜூன் 5) அன்று இந்தியாவின் தென்கோடி முனையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடியின் ஒரு பகுதியை, பெரிய பூநாரைப் பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
நான் தற்பொழுது பணி செய்யும் இடத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளது இந்தச் சரணாலயம். பூநாரைகளைப் பாதுகாக்க இது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி. என்றாலும், மீனவர்களின் மத்தியில் இது சில கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.