

கடம்ப மலர்
மஞ்சக் கடம்பு, கடம்பு என இரண்டு வகைக் கடம்பு மரங்களை இங்கு நடவு செய்தோம். அவற்றில் கடம்ப மரம் வறட்சியில் காய்ந்துவிட்டது. மஞ்சக் கடம்பு மரங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இலையுதிர் காலம் முடிந்து மரங்கள் தளிர்விடத் தொடங்கும்போது அவற்றில் கிளர்ந்தெழும் பசுந்தளிர்கள் மிக அழகாக இருக்கும். மரங்கள் உயரமாக வளராவிட்டாலும், ஓரளவுக்கு அகலமாக விரிந்துள்ளன. கடம்ப மரக் கட்டிலில் படுப்பது உடம்புக்கு நன்மை பயக்கும் என்று சொல்வார்கள். ‘உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு’ என்றொரு பழமொழிகூட உண்டு.
மரங்கள் வளர வேண்டுமெனில் அவற்றைக் கவாத்து செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால், இங்கே எந்த மரங்களையும் நாங்கள் கவாத்து செய்வதில்லை. இயற்கையாக அவை வளரும் போக்கில் விட்டுவிடுகிறோம். அதனால் மஞ்சக் கடம்பு மரங்களும் பெரிதாக வளரவில்லை.
வளராத மரங்கள்
மரங்கள் வளராததற்கு வேறு காரணங்களும் உண்டு. மரங்களில் அமர்ந்து எச்சமிட்டுப் பறவைகள் பரப்பும் விதைகளால், அவற்றின் அடியில் களையாக நிறைய முள்செடிகள் பெருகிவிட்டன. பரந்த இடமாக இருப்பதால் அவற்றை அகற்றித் தூய்மைசெய்ய எங்களால் முடிவதில்லை.
பருவகால மாற்றங்களால் வருங்காலத்தில் முள்செடிகளே நிலை பெறும் என்று ஆய்வுகளும் சொல்கின்றன. அதை நினைத்தால் கவலையாகவே இருக்கிறது. மரங்களின் கீழிருந்து முளைக்கும் முசுட்டைக் கொடிகள் நீண்டு வளர்ந்து மேலேறிப் பந்தல் போலப் படர்ந்து மரங்களின் வளர்ச்சியைப் பெரிதும் தடுக்கின்றன.