

எப்போது நேரம் கிடைத்தாலும் பறவைகளை நோக்க ஏரிக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனது நண்பர்கள் கேட்கும் கேள்வி, “எப்பவும் ஏரிக்குப் போறியே, பாத்ததையே பாக்குறதுக்குக் கடுப்பா இருக்காதா?”. இல்லவே இல்லை. பறவை நோக்குதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றைக் கற்றுத் தருகிறது. பறவைகள் என்ன எனக்குக் கற்றுத் தந்தன?
1. பொறுமை
பறவைகள் சிறந்த கண்காணிப்பாளர்கள். தங்கள் சுற்றுப்புறத்தை எப்போதும் கவனித்துக்கொண்டிருக்கும். பல நேரம் நான் பறவை பார்க்கும்போது, தனது பெயருக்கு ஏற்றாற்போல எனது நடமாட்டத்தை முதலில் அறிந்து ‘Did-you-do-it? ’ என்று கேட்பதுபோல வானில் பறந்து செல்லும் ஆள்காட்டி.
அப்போது மற்ற பறவைகளும் பறந்து சென்றுவிடும். பறவை இரை தேடும்போது, மற்ற விலங்குகளிடம் இருந்து தன்னையும், தனது குஞ்சுகளையும் பாதுகாக்கும்போது, கூடு கட்டும்போது எனப் பல விஷயங்களில் பொறுமையாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். நாமும் பறவைகளைப் பார்ப்பதற்குப் பொறுமை அவசியம்.
2. பொறுப்பு
பறவைகள் பூச்சிகளைச் சாப்பிட்டு இயற்கையைச் சமநிலையில் வைப் பதற்குப் பொறுப்பாக இருக்கின்றன. கூடுவாஞ்சேரி ஆதனூர் ஏரியில் ஒரே இடத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட பச்சைப் பஞ்சுருட்டான் பறவைகளைப் பார்த்தேன்.
ஒரு பஞ்சுருட்டான் ஒரு நாளில் 225 முதல் 250 பூச்சிகளை உணவாக உண்ணும். இதன் மூலம், வேளாண் நிலங்களிலும் இயற்கைச் சூழலிலும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முக்கியப் பங்கை வகிக்கிறது. அப்படி என்றால் 200 X 225 = 45,000 பூச்சிகளை நான் கண்ட பஞ்சுருட்டான் கூட்டம் சாப்பிட்டிருக்கும்.
பறவைகள் தங்களுக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக்கொண்டு பொறுப்புடன் செயல்படுகின்றன. சமூகப் பொறுப்பு, இயற்கைச் சமநிலைக்கான பொறுப்பைப் பறவைகளிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்.