

நாம் அழித்துக் கொண்டிருக்கும் பூமி குறித்து, எதிர்காலத் தலைமுறையிடம் என்ன பதில் சொல்லப் போகிறோம்?
ஒரு காலத்தில் மனித இனம் இயற்கையின் ஒரு பகுதியாக வாழ்ந்துவந்தது. இன்று இயற்கையை வென்று ஆட்சிசெய்யும் சக்தியாகத் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த வெற்றியின் பின்னால் ஒரு பேரழிவு அமைதியாக உருவாகிக்கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் இன்று நாம் காணும் காலநிலை நெருக்கடி, வெப்ப அலைகள், காட்டுத்தீ, வறட்சி, வெள்ளப் பெருக்கு, பனிப்பாறைகள் உருகுதல், உயிரினங்களின் அழிவு, மனித–வனவிலங்கு எதிர்கொள்ளல் போன்றவை தனித்தனியான நிகழ்வுகள் அல்ல.
இவை அனைத்தும் ஒரே நோயின் அறிகுறிகள். அந்த நோய் – கட்டுப்பாடற்ற நுகர்வுக் கலாச்சாரம். கடந்த நூற்றாண்டில் மனித சமூகம் பயன்படுத்திய வளங்களைவிட, கடந்த சில தசாப்தங்களில் பயன்படுத்திய வளங்கள் பல மடங்கு அதிகம். பூமியின் வளங்கள் முடிவற்றவை அல்ல.
இருப்பினும், பொருளாதார வளர்ச்சி என்கிற பெயரில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் மேலும் அதிக உற்பத்தியையும் அதிக நுகர்வையும் ஊக்குவிக்கிறது. உலகமயமாக்கலும் முதலாளித்துவப் பொருளாதாரமும் மனிதர்களைத் ‘தேவை’க்காக அல்ல, வெறும் ‘ஆசை’க்காக வாங்கும் சமூகமாக மாற்றியுள்ளன.