

எங்கள் காட்டிலுள்ள மரங்களில் மிக உயரமாக வளர்ந்தவை ஒருசிலவே. அதில் தான்றி மரமும் ஒன்று. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் சித்த மருத்துவத்தில் பயன்படக்கூடியவை. திரிபலா என அதைக் கூறுவர்.
அதிலிருந்து சூரணம் முதலியன தயாரிக்கப்படுகின்றன. எங்கள் காட்டில் அவை மூன்றையும் நட்டோம். கடுக்காய் மரங்கள் 2016ஆம் ஆண்டு நேர்ந்த கடும் வறட்சியைத் தாங்காமல் காய்ந்துவிட்டன. மற்ற இரண்டும் உள்ளன. இலையுதிர்த்த தான்றி மரம் மழைக்குப் பின் துளிர்விடத் தொடங்கும்.
கிளைகளில் கிளர்ந்தெழும் செந்தளிர்கள் சிறுசிறு அகல் விளக்குகளை ஏற்றி வைத்தாற்போல் காட்சியளிக்கும். ஒரு மரத்தில் பல விளக்குகளை ஏற்றியதுபோல், கதிரொளியில் அவை மின்னும் காட்சி மிக அழகானது.