

இது பங்குனி மாதம். தமிழ்க் கடவுளான முருகனுக்குப் பங்குனி உத்திரம் சிறப்பானது. முருகனுக்கு உரிய மலர் கடம்பம். (’கந்தா, கடம்பா, கதிர்வேலா’ பக்திப் பாடல் வரிகளை ஞாபகப்படுத்திக்கொள்ளவும்). அதேநேரம் கடம்ப மரம், கடம்ப மலர் எது என்கிற குழப்பம் பரவலாக உள்ளது.
சில பத்தாண்டுகளுக்கு முன் பெங்களூரு கப்பன் பூங்காவுக்குச் சென்றிருந்தபோது, கடம்பா என்று அடையாளப் படுத்தப்பட்ட மலரைப் பார்த்து அதிசயித்தேன். பந்து போன்றிருக்கும் பளிச்சென்ற மஞ்சள் - ஆரஞ்சு நிற மஞ்சரியில் சிறு வெள்ளை மலர்கள் பூத்திருந்தன.
இந்த மரத்தைப் பெங்களூருவில் சிறப்பாக வளர்த்திருக்கிறார்களே, தமிழ்நாட்டில் வளர்க்க வில்லையே என்கிற ஆதங்கம் அப்போது தோன்றியது. ஆனால், நான் பார்த்து வியந்த மரம் Neolamarckia Cadamba (செங்கடம்பு) என்கிற மரத்தின் மலரே.
உண்மையான கடம்பம், செங்கடம்பு ஆகிய மலர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை அவை உருண்டையாகப் பூப்பதே. பரவலாகக் கடம்பம் எனத் தவறாக அடையாளப்படுத்தப்படும் நியோலமார்கியா எனப்படும் செங்கடம்பு தமிழ் நிலத்துக்கு உரியது அல்ல என்று பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தியும் பேராசிரியர் டி.நரசிம்மனும் கூறுகிறார்கள்.
செங்கடம்பு ஏற்படுத்திய குழப்பம்
செங்கடம்பு தமிழ்நாட்டின் இயல்பான காட்டு மரமாக இருந்திருக்கவில்லை. பொதுவாகக் குறிஞ்சித் திணையைச் சேர்ந்த இந்த மரம், பக்தி இலக்கிய காலமான பொ.ஆ. (கி.பி.) 7ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
கர்நாடகம்-கோவா பகுதியில் செங்கடம்பு இயல்பாக வளர்கிறது. சுப்பிரமணியன் என்கிற பெயரும் அந்தப் பெயரிலான கடவுளும் கர்நாடகம்-கோவா பகுதிகளில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.
பக்தி இலக்கிய காலத்துக்குப் பிறகு சுப்ரமணியர் கோயில்கள் தமிழ்நாட்டில் பரவலானபோது, செங்கடம்பு இங்கு பரவி இருக்க வேண்டும் என்கிறார் கு.வி.கிருஷ்ணமூர்த்தி. அதனால் ஏற்பட்ட குழப்பமே செங்கடம்பை, தமிழ்க் கடம்பு எனத் தவறாக அடையாளம் காண்பதற்குக் காரணமாகிவிட்டது.