

வேலிக் கதிர்க்குருவி படம்: ரேணுகா விஜயராகவன் |கருங்கால் கதிர்க்குருவி படம்: ப.ஜெகநாதன்
காட்டில் மரங்களிடையே வீசும் நிலவொளியைப் பார்த்திருக்கிறீர்களா? பால் வண்ண ஒளி வானத்திலிருந்து மிதந்து இறங்குவதைப் பார்ப்பது மிக அழகாக இருக்கும். அந்த நாள்களில் நள்ளிரவிலும் அக்காக் குயில்கள் ஓயாமல் இசைக்கும்.
அவற்றால் நிலவொளியில் மகிழ்ந்து உறங்க முடிவதில்லை போலும்! அவை மிக அதிகமாகக் கூவும்போது மழை வரும் என்பது நம்பிக்கை. ஆனால், இப்போதெல்லாம் காலநிலை பெரிதும் பிறழ்ந்துவிட்டதால், மழை வருவதை யாரும் சரியாகக் கணிக்க முடியாத நிலையே உள்ளது.
எள்ளைக் காக்கும் முயற்சி
இயற்கை வேளாண் முன்னோடியான நாராயண ரெட்டியினுடைய தோட்டம் பெங்களூரு வட மாவட்டத்தில் தொட்டபல்லபுரா (Dodda ballapura) அருகில் உள்ளது. கசப்பு இல்லாத எள் ரகம் ஒன்றின் விதைகளைச் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவரிடமிருந்து பெற்றோம்.
அப்போது முதல் ஒவ்வோர் ஆண்டும் அந்த எள்ளை இங்கு விதைத்து வளர்த்து அறுவடை செய்தும் பிற உழவர்களுடன் விதைகளைப் பகிர்ந்தும் அந்த ரகத்தின் விதைகளைக் காப்பாற்றி வருகிறோம்.
2025ஆம் ஆண்டு கோடையில் இங்கு கடும் வறட்சி நிலவியது. ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் நின்றுவிடும் நிலைக்கு வந்துவிட்டது. அதிகபட்சம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே மோட்டார் ஓடுமளவு நீர் வரத்து இருந்தது.
சத்தியமங்கலம் பகுதியில் வழக்கமாக வடகிழக்குப் பருவ மழையே அதிகமாகப் பொழியும். செப்டம்பர் மாதத்திலிருந்து மழை தொடங்கும். அந்த ஆண்டு மே, ஆகஸ்ட் மாதங்களில் நல்ல மழை பொழிந்தது. அதனால் மேற்குறிப்பிட்ட எள்ளைப் பயிரிட நினைத்து, எங்களிடம் இருந்த விதைகளை நாற்று விட்டுவைக்க முடிவுசெய்தோம்.
மாறுபட்ட விதைப்பு
மழைக்காலம் நெருங்கிவிட்டதால் நிலத்தைத் தயார் செய்யவும் நாற்று வளரவும் சரியாக இருக்கும் எனத் திட்டமிட்டோம். இந்த ரக எள்ளை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்கிற ஆவல்தான். எள் விதைப்பதிலும் புது முறையைக் கையாள்கிறோம்.